சுவாதி கொலையாளியின் தெளிவான படத்தை வெளியிட்ட போலீஸ்...- 2 பேரிடம் விசாரணை
சென்னை: சுவாதி கொலை வழக்கில், சிசிடிவி கேமராவில் சிக்கிய கொலையாளி படத்தை தெளிவாக வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். கொலையாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில் 2 பேரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலக்கிருஷ்ணன் மகள் சுவாதி, 24, இவர், செங்கல்பட்டு, பரனூர் பகுதியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில், பணி புரிந்து வந்தார்.
கடந்த 24ம் தேதி அன்று, காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த சுவாதி, இரண்டாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது மர்ம வாலிபர் ஒருவர், கொடுவாளால், சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிவிட்டான்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பான கொலையாளியை 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக சல்லடை போட்டு தேடியும் கொலையாளி பற்றி எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. அவன் யார்? எதற்காக கொலை செய்தான் என்ற தகவல்களும் தெரியவில்லை.
சுவாதி கொலை தொடர்பாக போலீசுக்கு கிடைத்திருக்கும் முக்கிய ஆதாரம் வீடியோ காட்சிகள் மட்டுமே. அதில் இடம் பெற்றிருக்கும் நபரின் உருவத்தையும், வீடியோ காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர். ஆனால் அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை.
இதனால் போலீசாருக்கு, கொலையாளியை அடையாளம் காணுவதில், சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கொலையாளியின் உருவத்தை மிகவும் தெளிவாக மாற்றும் தொழில் நுட்ப உதவியை போலீசார் நாடினர். கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியும் அளவிலான புதிய போட்டோ ஒன்று தயாராகியுள்ளது. அந்த புகைப்படத்தை இப்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்து குற்றவாளியை அடையாளம் தெரிந்தவர்கள் காவல்நிலையத்தில் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளி பற்றி தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
சங்கர் கூடுதல் ஆணையர் - 89399 66985
மனோகரன் இணை ஆணையர் - 98409 62359
பெருமாள் துணை ஆணையர் - 94434 81933
தேவராஜ் உதவி ஆணையர் நுங்கம்பாக்கம் - 98401 90505
இதனிடையே சுவாதி கொலை தொடர்பாக போரூர், பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்த இருவரை பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று சுவாதியின் செல்போன் எண்ணிற்கு இவர்கள் இருவரும் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளதை அடுத்து இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.