சுவாதி கொலையாளி ராம் குமார் வீட்டில் தனிப்பிரிவு போலீசார் ஆய்வு
நெல்லை: சென்னை ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் வீட்டில் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் இன்று ஆய்வு செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24 ஆம் தேதி காலையில் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதும் பெரும் மர்மமாக இருந்து வந்தது.

தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் சுவாதியை கொலை செய்த கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மீனாட்சிபுரம் என்ற ஊரில் அம்பேத்கார் தெருவில் வசிக்கும் தொலைப் பேசி ஊழியர் பரமசிவன் என்பவரது மகன் ராம்குமார் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் ராம்குமாரின் வீட்டை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனிடையே ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அவரை கைது செய்து உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவனது வீட்டில் இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையாளர் தேவராஜன் தலைமையில் செங்கோட்டை ஆய்வாளர் பிரதாபன், ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து காவல்துறை உதவி ஆணையாளர் தேவராஜனிடம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சோதனை நடத்தபட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்து கூறமுடியாது என்றார்.












Click it and Unblock the Notifications