சிவகங்கை சிறுமி பலாத்காரம்: சென்னையில் சிபிசிஐடி விசாரணை: மாயமான அத்தை எங்கே?
சென்னை: சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர் சங்கர், தான் சிறுமியை பார்த்ததே இல்லை என சிபிசிஐடி போலீசில் தெரிவித்துள்ளார். அத்தையும் தலைமறைவானதால் குழப்பமடைந்த சிபிசிஐடி போலீசார், சென்னையில் தங்கியுள்ள சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகளை 28 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி, நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளிக்கவே, தந்தை-சகோதரர், சப்.இன்ஸ்பெக்டர், பஸ்கண்டக்டர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என வெளியான தகவலால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சப்.இன்ஸ்பெக்டர் சங்கர், நமச்சிவாயம் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். சிறுமி யின் பாட்டி, சித்தி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமியை தெரியாது
சப்.இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஐஜி, எஸ்பி உட்பட பலரும் விசாரித்தனர். சிறுமியின் அத்தை தாமரைச்செல்வியை மட்டுமே தெரியும். சிறுமியை யார் என்றே தெரியாது. அவரை பார்த்ததே இல்லை என எஸ்ஐ தெரிவித்துள்ளார்.
நமச்சிவாயம் மறுப்பு
தாமரைச்செல்வியுடன் தனக்கு நல்ல அறிமுகம் உள்ள தாகவும், சிறுமியுடன் எந்த பழக்கமும் இல்லை என நமச்சிவாயம் தெரிவித்தார். மதுரையில் சிறுமி தங்கியதாகக் கூறப்படும் விடுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.
செல்விதான் காரணம்
கண்காணிப்பு கேமிரா பதிவுகள் ஒரு மாதத்துக்கு மட்டுமே இருப்பதால் தடயம் ஏதும் சிக்கவில்லை. சிறுமியை அத்தை தாமரைச்செல்விதான் கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் தொந்தரவுகளுக்கு காரணமே அத்தைதான் என பாட்டியும், சித்தியும் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவான செல்வி
பாலியல் புகார் குறித்து ஆரம்பத்தில் சிறுமியுடன் புகார் கொடுக்க வந்திருந்த அவரது அத்தை செல்வி தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கோவையில் உள்ள செல்வி வீடு பூட்டிக்கிடக்கிறது. அந்த வீட்டை சோதனையிட வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
பழி வாங்குவதாக புகார்.
சிறையில் உள்ள தந்தையிடம் விசாரித்தபோது பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பழி வாங்குவதற்காக தாமரைச்செல்வி, சிறுமியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை காப்பகத்தில் தங்கி இருக்கும் சிறுமியிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. மாரிராஜன், ஆய்வாளர் ஜெனோவா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்தது என்ன?
நீதிபதியிடம் சிறுமி அளித்த ரகசிய வாக்குமூலத்துக்கும், விசாரணையில் கிடைத்த பல தகவல்களும் முரண்பாடாக உள்ளன. இந்த வழக்கு சிபிசிஐடி மாறியதும் தாமரைச்செல்வி தலைமறைவாகி விட்டார். சிறுமி மற்றும் தாமரைச்செல்வி ஆகியோரிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே இவ்வழக்கின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறியமுடியும். அத்தை தவறு செய்திருந்தால் புகார் அளித்த அவரே குற்றவாளியாக்கப்படுவார் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.