ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்- போலீஸ் விசாரணை
விருதுநகர்: விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி சமுத்திரம். இவர் பஸ் நிலையம் அருகே கட்டப்பட உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தளவாய்புரத்தை சேர்ந்த பாஸ்கரன், செட்டியார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, மாணிக்கவாசகம் ஆகியோர் வந்தனர். இவர்கள் பஸ் நிலையம் அருகே ஊரணி புறம்போக்கு இடத்தில் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு இருந்த 3 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி 2011ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் இடித்து விட்டது. தற்போது அந்த இடத்தின் அருகே கிராம ஊராட்சி சேவை மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தளவாய்புரம் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications