ரஜினி, பிரபுதேவா, கன்னட நடிகர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு- டிபிஜி ராஜேந்திரன்
சென்னை: சென்னையில் வசிக்கும் கன்னட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் பிரபுதேவா உள்ளிட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அங்கு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டார். இதனால் தமிழகத்திலும் கர்நாடகா வாகனங்கள் தாக்கப்பட்டன.
உச்சகட்ட வன்முறை
இந்த நிலையில் உச்சநீதிமன்றமானது காவிரியில் தமிழகத்துக்கு மேலும் சில நாட்களுக்கு நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் திடீரென பதற்றம் ஏற்பட்டு வன்முறை உச்சமடைந்தது.
தேடித்தேடி தீவைப்பு
தமிழர்களின் தொழில் நிறுவனங்கள், வாகனங்கள் தேடி தேடி தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் உட்பட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பாதுகாப்பு
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜேந்திரன், தமிழகத்தில் கன்னடர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் கன்னட நடிகர்கள், உணவகங்கள், வங்கிகள், பள்ளிகள், விடுதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, பிரபுதேவா
சென்னையில் வசித்து வரும் கன்னட நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.