ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வீசியவரை சுட்டுப் பிடித்த போலீசார்.. பரபர சம்பவம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த ஹரிக்கு வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த காவல் நிலைய வளாகத்துக்குள் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்தபடி இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், அவர்கள் யார் என்று விசாரித்துள்ளார். ஆனால், அதற்கு பதில் சொல்லாமல் மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை எடுத்து, வரவேற்பாளர் இடம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த சத்தம் கேட்டு வந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை உடனடியாக அணைத்தனர். அதற்கு முன்னதாக சிப்காட்டில் உள்ள அரிசி கடையின் மீதும் இதே நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்தச் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சிப்காட் காவல் நிலையத்துக்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி 7 தனிப்படைகள் அமைத்து பெட்ரோல் குண்டுகள் வீசி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். முதல் கட்டமாக சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல் துறையினர், அவர்களிடம் தீவிரமாக இன்று அதிகாலை முதல் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய ஹரி என்பவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் தாக்கிவிட்டு ஹரி தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் காலில் குண்டடி பட்டு காயம் அடைந்த ஹரி, வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹரி தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ முத்தீஸ்வரனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications