மாணவி உயிரிழந்த சம்பவம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்புவர்களை போலீசார் வலைவீசி தேடி கைது செய்து வருகின்றனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கையாள 18 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த குழுவினர் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர், இதில் மூன்று பிரிவுகள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டனர். சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான காவல் அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்தனர். உளவுத்துறை வீடியோ ஆதாரங்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினருடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்கின்றனர்.
தொடர்ந்து தங்களிடம் உள்ள பல்வேறு புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பியோர் உள்ளிட்ட பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications