நள்ளிரவில் "டாக்சி"யில் கூட்டிச் செல்லப்பட்ட ராம்குமார்... நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு!
சென்னை: சுவாதியைப் படுகொலை செய்தது எப்படி என்பது குறித்து நேரில் விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு ராம்குமாரை, நடு ராத்திரியில் டாக்சியில் வைத்து போலீஸார் அழைத்துச் சென்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் 3 நாட்கள் போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டது.
இந்த விசாரணையின் முக்கியப் பகுதியாக ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் போலீஸார் கூட்டிச்சென்ற தகவல் நேற்று வெளியானது. தற்போது அதுகுறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜூலை 13ம் தேதி
ஜூலை 13ம் தேதிதான் ராம்குமாரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்தனர். கோர்ட்டிலிருந்து நேராக அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நடுராத்திரியில்
அதன் பின்னர் அன்று நள்ளிரவுக்கு மேல் ஊரெல்லாம் அடங்கிய பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அருகே ஒரு இடத்திற்கு ஒரு கால் டாக்சி வரவழைக்கப்பட்டது. மப்டியில் சில போலீஸார் அதில் ஏறிக் கொண்டனர். கூடவே ராம்குமாரும். டாக்சி டிரைவருக்குக் கூட அவர் ராம்குமார் என்பது தெரியாத வகையில் ரகசியமாக செயல்பட்டுள்ளனர்.

டாக்சியில்
அந்த டாக்சி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்குப் போயுள்ளது. ஆள் அரவே இல்லாத அந்த நடுநசி வேளையில் ராம்குமாரை, சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு வைத்து எப்படி கொலை செய்தார் என்பதை நடித்துக் காட்டக் கூறினர். அதை வீடியோவிலும் படமாக்கினர்.

முழு ஒத்துழைப்பு
போலீஸாரின் விசாரணைக்கு ராம்குமார் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தாராம். போலீஸார் கூறியதை எல்லாம் கேட்டாராம். நடித்துக் காட்டும் சம்பிரதாயம் முடிந்த பிறகு மீண்டும் போலீஸார் காவல் நிலையத்திற்கு ராம்குமாருடன் திரும்பியுள்ளனர்.

மீடியா வெளிச்சத்திலிருந்து தப்ப
நள்ளிரவில் ராம்குமாரை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முக்கியக் காரணம், எப்போதும் சூழ்ந்திருக்கும் மீடியா வெளிச்சம் மற்றும் மக்கள் கூட்டத்திடமிருந்து தப்பத்தானாம். மேலும் பகல் நேரத்தில் ராம்குமாரை அழைத்துச் சென்று விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலும் நள்ளிரவுக்கு மேல் போலீஸார் ராம்குமாரை அழைத்துச் சென்றனராம்.












Click it and Unblock the Notifications