செம்மரக் கடத்தல் 'பெண்வீரப்பன்' கரகாட்டக்காரி மோகனாம்பாள் ஆந்திராவில் பதுங்கல்?
சென்னை : சந்தனக் கடத்தல் வீரப்பனைப் போல செம்மரக் கடத்தலில் கோலோச்சி வரும் கரகாட்டக்காரி மோகனாம்பாள் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கிடைத்துள்ள ரகசியத் தகவலையடுத்து போலீசார் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கை காட்டியது வேலூர் தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவை சேர்ந்தவர் மோகனாம்பாளைதான். கரகாட்ட கலைஞரான மோகனாம்பாள், காட்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மோகனாம்பாள் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு பதுக்கப் பட்டிருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 73 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப் பட்டது.
ஆனால், போலீஸ் சோதனைக்கு வரும் தகவலறிந்து மோகனாம்பாள் அவரது சகோதரிகள் நிர்மலா, ஜமுனா, நிர்மலா மகன் சரவணன், அவரது மனைவி தேவிபாலா, அவரது தம்பி காந்தி, மோகனாம்பாளின் தோழி ரோஸ் ஆகியோர் தலைமறைவானார்கள்.
கரகாட்ட கலைஞரான மோகனாம்பாளுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான மோகனாம்பாளையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அங்குள்ள அறையில் 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ஆயுதங்கள் செம்மர கடத்தலில் ஈடுபட மலை கிராம தொழிலாளிகள் பயன்படுத்துவது என தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கணவனின் சட்ட விரோத செயல்களை தெரிந்திருந்தும் அதனை மறைத்த குற்றத்திற்காக தேவிபாலாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டு வரும் மோகனாம்பாள் சென்னையில் மறைந்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மோகனாம்பாள் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் மோகனாம்பாளை கைது செய்து விடுவோம் எனத் தெரிவித்துள்ள போலீசார், மோகனாம்பாள், அவரது சகோதரி நிர்மலா, உறவினர் சரவணன் ஆகியோர் பிடிபட்டால் ரூ.4 கோடி எப்படி கிடைத்தது, செம்மரக் கடத்தலில் அவர்களுக்கு உள்ள பங்கு? போன்றவற்றுக்கு விடை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
மோகனாம்பாள் கைதானால் இது தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications