மெரினா டூ கதிராமங்கலம்... மக்கள் மீது தொடர்ந்து ஏவப்படும் போலீஸ் வன்முறை!
கடந்த ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தனர். அது, சாமளாபுரம், ஐஐடி சென்னை என நீண்டு, தற்போது கதிராமங்கலம் வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சென்னை: தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை அரசுக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் தொடங்கிய போராட்டம் இன்று கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் வரை போலீஸ் மக்கள் மீது பல்வேறு வன்முறைகளை ஏவிவருகிறது.
ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஜனவரி மாதம் 17ஆம்தேதி அலங்காநல்லூரில் வெடித்த போராட்டம், மெரினாவில் ஜனவரி 18ஆம் தேதி சிலநூறு பேருடன் ஆரம்பித்தது.இறுதியில் பல லட்சம் மக்கள் எந்த தலைவரின் தலைமையிலும் திரளாமல் மக்கள் தானாகவே திரண்டது வரலாறானது. அங்கு லட்சக்கணக்கில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் இரவுபகல் பாராது கடும் குளிரும் போராடி வந்தனர்.
இந்தப் போராட்டத்தை எதிர்பார்க்காத அரசு மிரண்டது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த அரசு, அது நிரந்தர சட்டமா இல்லையா என்பதை போராட்டக்காரர்களிடம் அறிவிக்கவில்லை.

ஜல்லிக்கட்டில் தடியடி
ஜனவரி 23 ஆம் தேதி காலை, போலீஸார் போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு கூற போராட்டக்காரர்களோ 'ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம், நிரந்தரச் சட்டம் என்பது உறுதிசெய்யப்பட்டால் தான் செல்வோம்' என உறுதியாகச் சொன்னதால் போலீஸ் அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது. சிலரை மிக கடுமையாகத் தாக்கியது.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையும் அழிந்தது
போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கினார்கள், ஆதரவு கொடுத்தார்கள் என நடுக்குப்பம் மீனவ மக்கள் மீது போலீஸ் கடுமையான வன்முறையை பிரயோகித்தது. அதனால் ஒரு பெண்ணின் கர்ப்பம் கலையும் அளவுக்கு தாக்குதல் நடத்தியது. நடுக்குப்பத்தில் இருந்த வண்டிகளை போலீசாரே உடைத்தனர்.

போலீசாரே உண்டாக்கிய கலவரம்
இதெல்லாம் மக்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பரப்பினர். உச்சக்கட்டமாக போலீசாரே ஆட்டோவுக்குத் தீ வைத்தக் காட்சி மொத்த தமிழகத்தையும் உலுக்கினாலும் இன்று வரை அந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது சுடும் உண்மை

டாஸ்மாக் போராட்டம்
உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து 3321 டாஸ்மாக் கடைகள் ஒரே இரவில் அகற்றப்பட்டன. அந்தக் கடைகளை ஊருக்குள் கொண்டு வர டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சித்தபோது அனைத்து ஊர் மக்களும் டாஸ்மாக் எங்கள் ஊரில் கூடாது என போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினர்.
Recommended Video


சாமாளாபுரம் அராஜகம்.
திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் பெண்கள், பொதுமக்கள் கூடி அங்கிருந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணை நடிரோட்டில் வைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதனால் அவருடைய செவித்திறன் பாதிக்கப்பட்டது.

பெண்ணை அறைந்த போலீஸுக்கு கௌரவம்
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் போராட்டம் நடத்தியும் அந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு தமிழக அரசு, ஈரோடு அதிரடிப்படை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி கௌரவித்தது.

மாட்டுக்கறிப் போராட்டம்
மத்தியில் பாஜக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து மாட்டுக்கறிக்கு எதிரான தடையை விதித்து வருகிறது. இந்நிலையில், தற்போது பசுவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சிக்காக மாட்டை விற்கவோ வாங்கவோ முடியாது. இதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து, ஐஐடி சென்னை வளாகத்தில் கடந்த மே 30ஆம் தேதி அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவர் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தியதால் அவர் பார்வை பறிபோகும் அளவுக்கு வலதுசாரி மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பெண்ணின் கையை உடைத்த போலீஸ்
இந்த தாக்குதலைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் ஐஐடி முன்பு போராட்டம் நடத்தியபோது, போலீசார் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் கையை உடைத்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளி வந்தது. நீதிமன்றமும் அந்த போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியும் இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கதிராமங்கலத்தில் காக்கிகள் வன்முறை
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த ஐந்து நாட்களாக ஒ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் பதித்திருந்த குழாயில் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் மக்கள் 'எங்கள் எதிர்கால சந்ததியினர் நலனையும் நிலத்தையும் காக்க ஓ.என்.ஜி.சி வேண்டாம்' என போராட்டம் நடத்துகின்றனர்.
அந்த மக்களின் போராட்டத்தை ஒடுக்குகிறோம் எனக் கூறி போலீசார் அவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர். இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் எடபபாடியார் கூறும்போது 'மக்கள் மீது லேசான பலப்பிரயோகம் நடத்தியது காவல்துறை' என்று காவல்துறையின் அராஜகத்தை ஆதரித்து பேசியுள்ளார்.

தீவைத்தபோலீஸ்
ஆனால், அந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் நியுஸ் 7 தொலைக்காட்சி அளித்த பேட்டியில் போலீசார் தான் எங்கள் ஊரில் வைக்கோலுக்குத் தீ வைத்தனர் என்று பகிரங்கமாகக் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கத் தொடங்கிய காவல்துறை இன்று வரை நிறுத்தவில்லை. தமிழக அரசு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டி, மக்களை பலி கொடுத்துக்கொண்டுள்ளது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications