மன்னார்குடி குடும்ப ஆட்சி ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல: எச்.ராஜா
தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் ஆட்சி நடப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அது ஏற்புடையதல்ல என்றும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறினார்.
கோவை: தமிழகத்தை மன்னார்குடி கும்பல் ஆட்சி செய்வது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். அதை முன்னிட்டு முன்னேற்பாடுகளை காண கோவை வந்த ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடப்பதைக் காட்டிலும் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பிருக்கும் பெண்களுக்குக் கூட பணத்துக்காக சில டாக்டர்கள் இதுபோல் அறுவை சிகிச்சை செய்கின்றனர் என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை இந்திய மருத்துவ கவுன்சில் தடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை திறந்து வைக்க நாளை கோவை வருகிறார். மோடிக்கு என்று தனியாக ஆன்மிக வழிபாடு உள்ளது.
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு இடது சாரிகளும், நாத்திகவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈஷா யோகா மையத்தில் எந்த விதமான விதிமீறல்களும் நடைபெற வில்லை. பசுமை கரங்கள் திட்டம் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். அங்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களிலும் விதி மீறல் இல்லை. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சசிகலா முதல்வராக கடிதம் கொடுத்த போது ஆளுநர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தார். பின்னர் 48 மணி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்தார். இதில் மத்திய அரசு, பா.ஜனதா தலையீடு இல்லை.
திமுகவில் ஸ்டாலின், அவரது மகன், மருமகன் என அரசியலுக்கு வருவதை போல, தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் குடும்பத்தினர் குடும்ப ஆட்சியை நடத்த திட்டமிடுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்றார் அவர்.












Click it and Unblock the Notifications