தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே- திருமாவளவன் பதிலடி
தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே நடத்தப்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே நடத்தப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. இதையடுத்து அவர் மாலை சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் சமூகவிரோதிகள் நுழைந்து விட்டனர். எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பேசியது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது: அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்துள்ளது. ரஜினியின் கருத்தை தான், தமிழக பாஜக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
போராடியவர்களை சமுக விரோதிகள் எனவும், தமிழகம் சுடுகாடாகும் எனவும் தெரிவித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
போராடிய மக்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறுவது அறியாமையின் உச்சம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார். 100 நாட்களாக போராட்டம் நடத்திய போது மக்களை சந்திக்காத ரஜினி, தற்போது கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
சமூக விரோதிகள் ஊடுருவலால் தான் பிரச்சனை என்ற ரஜினியின் கருத்து சரியானது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆமோதித்தார். தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது என்று திருமாவளவனும், போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தாலும் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் தெரிவித்தனர்.