விஜய் வீட்டு ஐடி ரெய்டுக்கு பின்னணியில் ஆயிரம் அரசியல்கள்!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் புலிப்பட யூனிட் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை, சோதனையின் பின்னணியில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 1ம்தேதி, புலி திரைப்படம் ரிலீசாக வேண்டிய நிலையில் செப்டம்பர் 30ம் தேதி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யின் நீலாங்கரை வீடு மட்டுமல்ல, சாலிகிராமம் அலுவலகம், அடையாறில் உள்ள வீடு என எல்லா இடங்களிலும் நுழைந்திருந்து சோதனை போட்டனர்.

அதிரடி ரெய்டு
'புலி' படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் விருகம்பாக்கம் வீடு, வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகம், மற்றொரு தயாரிப்பாளரான சிபுதமீன் வீடு-அலுவலகம், மறைந்த டைரக்டர் ராம.நாராயணன் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு இவற்றுடன் விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வீட்டிலும் ரெய்டு நடந்தது.

பாகுபலி இல்லையே
மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் "புலி' படக்குழுவையே ஓடவிட்டு விரட்டியது. 300 கோடி பட்ஜெட் என கூறப்பட்ட பாகுபலி டீமிடம் கூட இந்த ரெய்டு நடைபெறவில்லை. அங்கு சந்திரபாபு நாயுடு பக்கபலமாக இருந்து பாகுபலியை காப்பாற்றினார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் புலிக்கு நேர்ந்த நிலைக்கு, பின்னணியிலுள்ள காரணம் கசியத்தொடங்கியுள்ளது.

ரகசிய தகவல்கள்
படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங்கெடுத்து, படத்தின் பட்ஜெட், பைனான்சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கியுள்ளனர். ஏன் இவ்வளவு அக்கறையோடு இந்த திட்டம் நடைபெற்றது என்பதன் பின்னணியில் அரசியல் உள்ளதாம்.

மத்தியில் பிரஷர்
பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர் ஒருவர் விஜயை சந்திக்க விரும்பியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு விஜய் வாய்ஸ் தர வேண்டும் என்று கேட்பது அவரது நோக்கம் என்பதை அறிந்த விஜய் நழுவிக்கொண்டுள்ளார். இதனால் ஒரு ரெய்டை நடத்தி சிறு டிரையலை காட்டியுள்ளனராம். இப்படியே ஜகா வாங்கினால், மெயின் பிச்சர்கள் களமிறங்கும் என்று விஜய்க்கு மேலிட தலைவர் விடுத்த மறைமுக எச்சரிக்கை இந்த ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரம்.

மாநிலத்திலும் கோபம்
அதுமட்டுமின்றி, புலி படம் ரிலீசாகும் முன்பே, நாம் தெரிவித்தபடி, இது ஸ்ரீதேவி என்ற ராணியையும் அவரை ஆட்டுவிக்கும் சுதீப் என்ற வில்லனையும் விஜய் எதிர்க்கும் கதையாகும். "நீங்க நல்லவங்கதான், உங்களை சுற்றியுள்ளவர்கள் சரியில்லை" என்பது போன்று விஜய் பேசும் வசனங்களுடன் படம் அமைந்துள்ளது. இதுவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுப்பை கிளப்பியதாகவும், கூறப்படுகிறது. எனவே, மத்தி மற்றும் மாநிலம் ஆகிய இருபக்கமும் சிக்கிக்கொண்ட தவில் போல மாறியது விஜய் நிலை.

விஜய் கையில் முடிவு
விஜய் அரசியல் குறித்த ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுப்பது அல்லது, அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல நடந்துகொள்வதுடன், தனது படங்களிலும், சீண்டல்களை நிறுத்திக்கொள்வதுதான் இந்த பிரச்சினைகளில் இருந்து அவரை விடுவிக்கும் என்று திரையுலகம் கருதுகிறது. ஆனால் இஷ்டப்பட்டதை செய்யும் உரிமை இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அதை விஜய் செய்தால், தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.












Click it and Unblock the Notifications