விளம்பரத்துக்காக காங். தலைவர்களின் கொடும்பாவியை எரிக்கிறார்கள்...: விஜயதாரணி
சென்னை: விளம்பரத்துக்காக காங்கிரஸ் தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து, தமிழர் முன்னேற்ற படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நக்மா, குஷ்பு சுந்தர் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து இருக்கிறார்கள்.

தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கை அரசே காரணம் என்று முன்பு கூறினார். இப்போது மீனவர்கள் பிரச்சினைக்கு மீனவர்களே காரணம் என்று கூறுகிறார்.
தமிழக மீனவர்கள் நலன் மீது துளியும் அக்கறையில்லாத பா.ஜ.க அரசையும், பெயரளவுக்கு கடிதம் வாயிலாக மீனவர்கள் கைதை கண்டிக்கும் அ.தி.மு.க. அரசையும் கண்டிக்காமல் விட்டு விட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகளை யார் தூண்டுதலின் பேரில் எரித்தார்கள்.
உண்மையிலேயே தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பார்களானால், உலகம் சுற்றும் மோடி மற்றும் கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா உருவ பொம்மைகளை எரிப்பதற்கு தைரியம் இல்லாமல், வீண் விளம்பரம் தேடும் நோக்கத்தோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த செயல் மீண்டும் தொடருமேயானால், கை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம், தக்க பதிலடி கொடுக்கப்படும்' என அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications