ராணுவத்திலும் தனியார் தலையீடா... மாநில அரசு மவுனம் கலைக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்!
சென்னை : சென்னை ஆவடியில் இயங்கும் ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடும் மத்திய அரசின் முடிவை கைவிட மாநில அரசு வலியுறுத்த எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ராணுவத்திலும் தனியார் தலையீடு இருப்பது ஆபத்தானது என்பதோடு இந்த ஆலையை மூடுவதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு திட்டம். 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிற இந்த ஆலை மூடப்பட்டால் சுமார் 2,200 பேர் பணி இழக்க நேரிடும். மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து திருமாவளவன் கூறியதாவது : பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே தொண்டு செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனங்களை மூடி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே ராணுவ சீருடை தயாரிக்கும் நிறுவனத்தை மூடி தனியாருக்கு இந்த பணியை ஒதுக்க மத்திய அரசு நினைக்கிறது.
ராணுவத்தில் தனியார் மய தலையீடு என்பது மிகவும் ஆபத்தான விஷயம். எனவே மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும், மேலும் பாஜகவின் இந்த முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவிக்கிறது. தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கூறியதாவது : தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களை மூட மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு துடிக்கிறது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாநில அரசு மவுனத்தை கலைத்து மத்திய அரசுக்கு இந்த ஆலையை மூடக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது: மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என்ற தவறான முடிவை எடுத்து அவசர கதியில் நிறைவேற்றி வருகிறார்கள். ராணுவத்திற்கு ஆடைகள் தயாரிக்கும் ஆடைகளை மூடுவது என்பது சொந்த நாட்டு ராணுவமே அந்நிய நிறுவனங்களை நம்பித் தான் இருக்கின்றன என்ற நிலையை ஏற்படுத்தும். மற்றொருபுறம் தமிழகத்தில் செயல்படும் ஒரு மத்திய நிறுவனத்தை மூடுவதால் வேலைவாய்ப்பு இழப்பு நேரிடும். எனவே மாநில அரசு தலையிட்டு இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்யி கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications