நன்கொடைகள்: ரூ.112 கோடி வசூலித்து ஆளும் கட்சியை தூக்கி சாப்பிட்ட திமுக- அதிமுகவுக்கு ரூ 4 கோடிதான்!!
சென்னை: கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் குறித்த விபரத்தை தேர்தல் ஆணையத்திடம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இதில் அதிமுகவை விட பல மடங்கு அதிகமாக திமுக நன்கொடை பெற்றது தெரிய வந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலையை தேர்தல் ஆணையமும், கட்சிகளும் தொடங்கி விட்டன.
இந்நிலையில், தங்களது கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை விபரங்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
அதன்படி, 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, 259 பேரிடமிருந்து 112 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக திமுக அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக 2013 -14ம் ஆண்டுகளில் மட்டும் திமுகவிற்கு 79 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலானதாகக் கூறப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி மற்றும் ஏ.வ. வேலு ஆகியோர் கட்சிக்கு அதிகப்படியான நன்கொடை அளித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நன்கொடை அளித்தவர்கள் குறித்த விவரங்கள் பான் அட்டை எண்ணுடன் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஆளும் கட்சியான அதிமுக., இந்த ஆண்டுகளில் 4 கோடியே 17 லட்ச ரூபாய் மட்டுமே நன்கொடையாக பெற்றதாக தெரிவித்துள்ளது. இதில் அண்ணா தொழிற்சங்க பேரவையும், சென்னை மேயர் சைதை துரைசாமியும் அதிகப்படியான நன்கொடை அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சைதை துரைசாமி கட்சித் தலைமையால் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளும், தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளன.
20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி, தமிழக அரசியல் கட்சிகள் இந்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.