காமன்வெல்த் மாநாடு.. இலங்கை தூதரின் கருத்து கண்டனத்துக்குரியது: பாஜக
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது.

தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந் நிலையில் டெல்லியில் இலங்கை தூதர் கரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. அனைத்து முனையிலும் தோற்றுப் போன மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசி இருக்கிறார்.
இதில் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன.
சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு அச்சப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications