விசயம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் - என்ன சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
விஷயம் தெரிந்தவர்கள் பிரதமர் கூறியதை புரிந்து கொள்வார்கள் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்தேன் என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது என பிரதமர் விளக்கியுள்ளார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தருவதாக முதல்வரிடமே பிரதமர் கூறியுள்ளார் என்றார்.
விஷயம் தெரிந்தவர்கள் பிரதமர் கூறியதை புரிந்து கொள்வார்கள் என அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினேன். இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் தவேயே சந்தித்து முறையிட உள்ளேன், தமிழ்நாட்டில் இருந்து ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகளும் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications