செயல் தலைவராக மு.க. ஸ்டாலின்.. பொன். ராதாகிருஷ்ணன், ஜி.கே. வாசன் வாழ்த்து
திமுக செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொன். ராதாகிருஷ்ணன், ஜி. கே. வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் பொருளாளரான மு.க. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். திமுகவின் சட்டவிதிகள் திருத்தப்பட்டு இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட உடன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரசியல் பயணத்தில் ஸ்டாலின் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் வாழ்த்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசனும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை மற்றும் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.