தமிழகத்தில் வாடகை நாற்காலி ஆட்சி நடக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன்
சட்டசபையில் திமுகவினர் நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும் தமிழகத்தில் வாடகை நாற்காலி ஆட்சி நடக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தற்போது வாடகை நாற்காலி ஆட்சி நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மூடப்பட்டதற்கு இந்த அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மாணவர்களுக்கு நல்ல கல்வி தராமல் கடந்த, 50 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நீட் தேர்வு
அரசுப் பள்ளிகளை மூட அரசுக்கு உரிமை கிடையாது என்றும் குற்றம் சாட்டிய அமைச்சர், நீட் தேர்வு என்பது மாணவர்கள் முன்னேற்றத்திற்காகத்தான். ஆனால் அதை கொண்டு வர விடாமல் தடுக்கின்றனர் என்றும் கூறினார். தேர்வு நடக்கும் போது மட்டும் அதுபற்றி பேச கூடாது என்றார்.

விசாரணைக் கமிஷன்
சட்டசபையில் திமுகவினர் நடந்து கொண்டதும், சபாநாயகர் பேசியதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். சட்டசபையில் ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது. சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு நீடிக்க வேண்டும்
தமிழ்நாட்டிற்குக் கொடுக்கக்கூடிய முழு ஒத்துழைப்பும் கொடுப்போம். இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் தயாராக இல்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாடகை ஆட்சி
தமிழகத்தில் வாடகை ஆட்சி நடக்கிறது என்றும் இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீடிக்க விரும்பவதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், அடுத்த நிமிடமே, ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications