பொன்னர் பேச்சுவார்த்தை தோல்வி.. தங்கச்சிமடத்தில் 6-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதியை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர்.
இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 6-வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும், வெளியுறவுத் துறை செயலர் நேரில் வந்து மீனவர்கள் மீதான தாக்குதல் இனி தொடராது என உறுதி அளித்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையிலே சனிக்கிழமை தங்கச்சிமடம் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துப்பாக்கிச் சூட்டில் பலியான பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையில் தாக்குதல் கட்டுக்குள் இருந்தது.
நவம்பர் மாதம் நடந்த இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தின் போது தமிழக மீனவர்கள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாரஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தற்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு இந்திய தூதர் நேரடியாக இலங்கை சென்று கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். எனவே பிரிட்ஜோ உடலை உடனே நல்லடக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதியை ஏற்க மறுப்புத் தெரிவித்துவிட்டனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தங்கச்சிமடத்தில் போராட்டம் தொடரும் எனவும் போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.