மோதல் முற்றுகிறது.. புதுவை முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆளுநர்
புதுச்சேரி: 'தனி ராஜ்யம்' நடத்துவதாக தம் மீது புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகளை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா நிராகரித்துள்ளார்.
புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி, என் மீது புகார்களை கூறி பேசியதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் 239-வது பிரிவின்படி துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பொதுமக்கள் நலன் கருதியே நான் செயல்படுகிறேன்.
நான் பதவி ஏற்ற போது, புதுவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அனைத்து தரப்பு மக்களும் புகார் கூறினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மவுனமாக இருந்தனர். இதனால், மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்பட நான் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்தேன்.
எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான நிர்வாகத்தை நடத்தவும் முயற்சித்தால், அது போட்டி அரசாங்கம் நடத்துவதாகுமா?
எனது அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் மாதக்கணக்கில் திருப்பி அனுப்பப்படவில்லை எனக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் முடங்கின எனக் கூறப்படுவதும் பொய்யானதாகும்.
புதுவை மாநில அரசு துறையைச் சேர்ந்த 18 அதிகாரிகளை பல்வேறு பதவிகளுக்கு நியமிப்பது தொடர்பான கோப்பு எனக்கு அனுப்பப்பட்டது. அதே நாளன்று மாலையே இரண்டு கோப்புகளுக்கு அங்கீகாரம் தந்தேன். மேலும் 18 பதவி நியமனங்களில் 16 பதவிகளுக்கு அனுமதி தரப்பட்டு டிசம்பர் 31-ஆம் தேதியே கோப்பு அனுப்பப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குரிய பணியிடத்தில் புதுவை அரசு சேவை அதிகாரியை நியமிப்பது விதிகளுக்கு மாறானதாகும்.
காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் திட்டம் கடந்த 2006-லேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்ற கடந்த 8 ஆண்டுகளாக என்ன முயற்சி எடுத்தனர் என்பதே தெரியவில்லை.
நான் மேற்கொண்ட முயற்சியால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இம்மருத்துவமனையை அமைக்க முன்வந்தது. அப்படி இருக்கையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டத்தை நான் தடுப்பதாக கூறுவது வேதனைக்குரியது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும், மத்திய பெட்ரோலிய அமைச்சர் மொய்லியை அழைக்கலாம் எனவும் ஒப்புதல் தெரிவித்து கடந்த 6-ஆம் தேதி வந்த கோப்பை முதல்வர் அலுவலகத்துக்கு 8-ஆம் தேதி அனுப்பி விட்டேன்.
ஆனால் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை, பெங்களூர், ஐதராபாத், போன்ற நகரங்களில் இருந்து சிறிய ரக விமானங்களை புதுவைக்கு இயக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரிடமும், மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடமும், கடந்த 2008-ஆம் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடமும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தால், புதுவைக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை.
இவ்வாறு துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா விளக்கம் அளித்துள்ளார்.