பொங்கல் பண்டிகைக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கள் பண்டிகைக்கு 11,270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 11,270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications