களை கட்டும் தலை பொங்கல்- சீர்வரிசை வாங்க நெல்லை சந்தையில் செம கூட்டம்!
நெல்லை: பொங்கல் பண்டிகைக்காக தலை பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு பொருட்கள் வாங்க திருநெல்வேலி சந்தையில் பொதுமக்கள் கூடி வருவதால் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தை பொங்கல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தலை பொங்கல் கொண்டாடும் புது மண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் காய்கனிகள் மற்றும் பொங்கல் சீர் வரிசை வழங்குவர்.

நெல்லை மாவட்டத்தில் பொங்கலையொட்டி பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. மார்க்கெட்கள், கடைவீதிகளில் கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு, பொங்கல் பொருட்கள், காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தலை பொங்கலை ஓட்டி சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை தற்போது உச்ச கட்டத்தை நெருங்கியுள்ளது. அனைத்து வகையான காய் கனிகள், கரும்பு, மஞ்சள், பொங்கலிடத் தேவையான பானைகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. நெல்லையின் பல்வேறு பகுதிகளில் கரும்பு, வாழைக்குலைகள் உள்ளிட்ட பொங்கல் சீர்வரிசை பொருட்களுடன் நேற்று வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

பொங்கலையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
இதனால் பாளை காந்தி மார்க்கெட், உழவர் சந்தை, நெல்லை டவுண் போஸ் மார்கெட், நயினார்குளம் மார்கெட், மற்றும் பொங்கல் சீர்வரிசை விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தாண்டு மழை ஓரளவுக்கு கை கொடுத்த போதிலும் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை தற்போது உயர தொடங்கியுளளது.
நயினார்குளம் மொத்த மார்க்கெட்டில் இரவு முழுவதும் விற்பனை நடைபெறும் என்பதால் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்க குவிகின்றனர்.
பொங்கல் சீர் வரிசை வாங்க வாகனங்களில் பொதுமக்கள் குவிந்து வருவதால் அங்கு கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications