ஓ.பி.எஸ்.ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்!
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை மிக தீவிரமாக ஆதரித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான சி. பொன்னையன் தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். ஜெயலலிதா அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமித்திருந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார் பொன்னையன்.

சர்ச்சை பொன்னையன்
பின்னர் சசிகலாவை படுதீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். அதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா என ஸ்ரீராம் சிட்பண்ட் நாமினி பேப்பரை காட்டியும் சர்ச்சையில் சிக்கியவர் பொன்னையன்.

அவைத் தலைவர்
இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்தார். இதனால் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் மதுசூதனன் நீக்கப்பட்டார்.

அதிருப்தி
புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்திருந்தார் சசிகலா. அதிமுக அவைத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவிக்க பொன்னையன் முடிவு செய்துள்ளதாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் முதலில் பதிவு செய்தது. தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பொன்னையன் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications