பொன்ராஜ் மீது வழக்கு.. அப்துல் கலாமிற்கு ஆலோசனை சொன்னவருக்கு நாம் ஆலோசனை சொல்வதா? கொந்தளித்த தனியரசு
சேலம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஆலோசனை கூறிய பொன்ராஜ்-க்கு நாம் ஆலோசனை சொல்ல முடியுமா என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கேள்வி எழுப்பியுள்ளார். பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்ததற்காக முதல்வர் விஜய்யை கண்டிப்பதாக கூறிய தனியரசு, சமூக சீரழிவை கேள்வி கேட்டால் வழக்குப்பதிவு செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றியவர் பொன்ராஜ். இவர் டிவி விவாதங்களில் அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். அண்மையில் தவெக தொடர்பாக பேசும் போது, பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாகியது. இதன்பின் தவெகவினர் பலரும் பொன்ராஜ் மீது புகார் அளித்தனர்.

அந்த வகையில் பொன்ராஜின் சர்ச்சை பேச்சை கண்டித்து தவெக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொன்ராஜ் மீது பெண்களை இழிவாக பேசியது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவின் கீழ் கடலூர் புதுநகர் போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்ன கருத்து சொன்னார்.. குப்பை பொருக்குபவன்லாம் 3 மனைவி வச்சுருக்காங்க.. எங்க அண்ணன் வைத்தால் என்ன தவறு என்று கேட்ட பெண்ணை பற்றி தான் பொன்ராஜ் பேசினார். விபச்சாரி என்று வார்த்தையை சொல்லவில்லை.
விபச்சாரி போல் என்றுதான் சொன்னார்.. அப்துல் கலாமிற்கு ஆலோசனை சொன்னவருக்கு நாம் ஆலோசனை சொல்ல முடியுமா.. ஜெயலலிதாவுக்கும் ஆலோசனை செய்தவர் தான் பொன்ராஜ். தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்களுக்கு ஆலோசகராக இருந்தவர்.. அவரை போய் நீங்கள் இந்த வழக்கில் கைது செய்து சாதாரண குற்றவாளிகளை போல் கைது செய்ய எத்தனித்தால்.. இந்த நாடு எதை நோக்கி பயணிக்கிறது?
என் கணவனை விட விஜய்யை நேசிக்கிறேன் என்று சில பெண்கள் பேசுகிறார்கள்.. இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது.. தொண்டர்களை தலைவன் தான் பண்படுத்த வேண்டும். ஆனால் கட்சியின் தலைவர் விஜய் என்ன சொல்கிறார் தெரியுமா.. கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தைகளையும் கைவிட்டுவிட்டார்.. நயினார் நாகேந்திரன் விஜய்யுடன் ஒரு நடிகையை தொடர்புபடுத்தி சொன்னார்.
அதே நடிகையுடன் விஜய் திருமண நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்.. அவரின் மனைவியையா அழைத்து வந்தார்? திருமண உறவுகளை மீறி விதிகளுக்கு புறம்பாக வாழ்க்கை நடத்தும் ஒருவரை அரசியல் தலைவராக கொண்டு வருவீர்கள். அதனை பொன்ராஜ் கேள்வி கேட்டால் வழக்குப்பதிவு செய்வீர்களா? என்ன நாடு இது.. இந்த தமிழ்ச் சமூகம் குடும்ப ஒழுங்குமுறையுடன் செயல்படுகிறது.
நாட்டின் சீரழிவை தடுத்து நிறுத்த பொன்ராஜ் கருத்து கூறினார். அவரையே மிரட்டி வழக்குப்பதிவு செய்கிறீர்கள்.. அவர் வழக்குக்கு பயப்பட மாட்டார்.. அவர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications