கதிராமங்கலம் போராட்டத்தில் கைது.. பொய் வழக்குகளை வாபஸ் பெற பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை
கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் முற்றுலுமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், இவர்கள் மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைதையும் வாபஸ் பெற வேண்டும். கதிராமங்கலம் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக பூர்வமான எதிர்ப்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.