6 பேர் பலிக்கு உதயகுமார் மீது வழக்குப் பதிவு: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்
இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அருகே சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாது மணல் வியாபாரம் தொடர்பாக கூத்தங்குழி கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பிரிவினர் பாதுகாப்பிற்காக சுனாமி குடியிருப்பில் தங்கி இருந்தனர். இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், தங்கள் உயிரை காத்துக்கொள்ள கூத்தங்குழி கிராம மக்களில் ஒரு பிரிவினர் சுனாமி குடியிருப்பில் தங்கியிருந்தது அப்பகுதியில் இருக்கும் காவல்துறையினர் உட்பட அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நேற்று 26-11-2013 மாலை சுனாமி குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காந்திய வழியில் போராடி வரும் சுப. உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பது உள்ளிட்ட மிகவும் ஆபத்தான சட்டப்பிரிவுகளில் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி, சுனாமி குடியிருப்பில் நடந்த சம்பவத்திற்கும், அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவிற்கும் தொடர்பில்லை என்று கூறியிருக்கிறார். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்நிலையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக காந்திய வழியில் போராடி வரும் சுப. உதயகுமாரன் உள்ளிட்டவர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள குற்றவியல் சட்டப்பிரிவுகளில் (IPC 121, 121A, 304, 345, 436) வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. இது உண்மையானால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். மேலும் 6 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின் விசாரணையை வேண்டுமென்றே தவறாக திசைதிருப்பி உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க அனுமதிக்கும் செயலாகும்.
எனவே இந்த சம்பவத்தில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக காந்திய வழியில் அமைதியாக போராடி வரும் சுப. உதயகுமாரன் உள்ளிட்டவர்கள் மீது புனையப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்துவிட்டு, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.