நடிகர் சங்க உறுப்பினர்கள் என்று சொல்லி நடிகரின் மனைவியிடம் கொள்ளை
சென்னை: நடிகர் சங்கத்தில் உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி மறைந்த நகைச்சுவை நடிகர் பக்கோடா காதர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவரது மனைவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பக்கோடா காதர். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ஒரு படத்தில் அப்பா பக்கோடா... பக்கோடா என்று கூறி நடித்ததால் 'பக்கோடா' என்ற பட்டபெயர் காதருடன் சேர்ந்து கொண்டது. இவர் ராமன் எத்தனை ராமனடி, ஒளிவிளக்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது மனைவி மும்தாஜ், 52 சென்னை எம்.ஜி.ஆர்.நகர், பொன்மனச்செம்மல் தெருவில் வசிக்கிறார். மும்தாஜூம் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் அவரது தங்கை, 2 மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். மகன் முதல் மாடியில் வசிக்கிறார். மும்தாஜ் தனது, 2 மகள்கள் மற்றும் தங்கையுடன் வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.
நடிகர் சங்கத்தில் தேர்தல் நடந்த மறுதினம், திங்கட்கிழமையன்று, இரவு 7 மணி அளவில், மும்தாஜ் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் , நடிகர் விஷால் அணியைச் சேர்ந்தவர்கள். நாங்கள். உங்களுக்கு உதவித்தொகை வாங்கி கொடுக்க வந்துள்ளோம் என்றும் அதற்கான விபரம் வேண்டும் என்றும் மும்தாஜியிடம் தெரிவித்தனர். அவர்களை வரவேற்ற மும்தாஜ் வீட்டிற்குள் உட்காரச் சொன்னார்.
திடீரென்று அந்த மர்ம நபர்கள் மூவரும், மும்தாஜை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். வீட்டில் இருக்கும் நகை, பணத்தை தராவிட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று கூறிய அவர்கள், மும்தாஜ் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.2,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சற்று நேரத்தில் வெளியில் சென்றிருந்த மும்தாஜின் தங்கை மற்றும் மகள்கள் வீட்டுக்கு வரவே, அவர்களிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்தாஜ், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் ஆறுமுகம் மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.