மதிமுக, பாமக, கம்யூ, த.மா.கா இணைந்து 3வது அணி உருவாகுமா?: அதிமுகவுக்கு போகுமா வி.சி?
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இருந்து வெளியேறிய மதிமுகவும், வெளியேறக் காத்திருக்கும் பாமகவும் 2016 தமிழக சட்டசபை தேர்தலில் 3வது அணியை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா அணியில் முதல் இடம் பிடித்தது மதிமுக. தற்போது அந்த கூட்டணியில் இருந்து முதல் கட்சியாகவும் வெளியே வந்துவிட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்த நிலையில் வருமா? வராதா? என்று ரொம்பவே குழம்பவிட்டது பாமக. பின்னர் அன்புமணியும் விஜயகாந்தும் கைகுலுக்கி ராசியானார்கள். தேர்தலையும் எதிர்கொண்டனர்.
மதிமுக குரலில் பாமக
இப்போது பாஜக அணியைவிட்டு வெளியேறிய மதிமுகவின் குரலிலேயே மத்திய அரசை பாமகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, மோடியை விமர்சிக்கும் கருத்துகளில் உடன்பாடு உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
சுவாமியின் பாய்ச்சல்
இதனால் பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் கலக விதை விதைத்துள்ளார்.
திமுகவுக்கு வைகோ புகழாரம்
மதிமுக பொதுச்செயலர் வைகோ சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற முப்பெரும் விழா கூட்டத்தில் திமுகவை புகழ்ந்தார். இதனால் வைகோ திமுக பக்கம் சாய்கிறார் என்று கூறப்பட்டது.
திமுகவை நோக்கி போன பாமக
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென கருணாநிதியைப் போய் பார்த்து தமது வீட்டு திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். ஆஹா,... சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மதிமுக, பாமக ஆகியவை கூட்டணி அமைக்கப் போகிறதோ என்ற யூகங்கள் எழுந்தன.
வைகோ-ஸ்டாலின் சந்திப்பு
இதனை உறுதிப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்தார். பின்னர் மதுரைக்கு இருவரும் ஒரே விமானத்தில் புறப்பட்டுப் போனார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் கூட திமுக அணியில் மதிமுக இடம்பெற்றால் மகிழ்ச்சி என்றார்.'
பின்வாங்கிய வைகோ
இருப்பினும் மீண்டும் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பதா? என்று மதிமுகவில் எதிர்ப்பு கிளம்ப திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று வைகோ அறிவித்தார். இதன் பின்னர் திமுகவை விமர்சித்தும் வருகிறார் வைகோ.
யூ டர்ன் அடித்த அன்புமணி
இதேபோல் பாமகவின் அன்புமணியும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியதுடன் "திராவிட கொள்கைகள் செல்வாக்கை இழந்து விட்டன. இந்த காலத்தில் அது எடுபடாது. 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த இரண்டு திராவிட கட்சிகளும் தங்கள் கொள்கைகளை கைவிட்டு விட்டன" என்று விமர்சித்ததுடன் இந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பும் கோரியிருக்கிறார். இனி கூட்டணியும் வைக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
புதிய யூகங்கள்
இப்படி திமுக- அதிமுகவை விட்டு விலகி நிற்பதில் உறுதியாக இந்த கட்சிகள் 2016 தமிழக சட்டசபை தேர்தலில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என்பது புதிய யூகங்களை கிளப்பியுள்ளது.
நட்பு கட்சிகள்
பாமக, மதிமுக இரண்டும் கட்சிகளுக்கும் பெரிய அளவில் கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை... இதேபோல் இந்த இரண்டு கட்சிகளும் இடதுசாரிகளுடன் கை கோர்ப்பதற்கும் பெரிய அளவிலான முட்டுக்கட்டையோ தடை இல்லை.
த.மா.கா.
காங்கிரஸில் இருந்து வெளியே வந்து தமிழர் உரிமைக்காக மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியிருக்கிறேன் என்று பிரகடனம் செய்து பேசிவரும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாமக, மதிமுக, இடதுசாரிகள் புறக்கணிக்கவும் வாய்ப்புகள் குறைவு.
மதிமுக- பாமக- இடதுசாரிகள்- த.மா.கா. இணைந்து 3வது அணி?
ஆகையால் 2016 சட்டசபை தேர்தலில் மதிமுக, பாமக, இடதுசாரிகள், த.மா.கா. ஆகியவை இணைந்து 3வது அணியை அமைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தள்ளாட்ட தேமுதிக
வழக்கம்போல தேமுதிகவின் நிலை 'தள்ளாட்டத்துக்கு'ரியதாக இருக்கலாம்.. அல்லது மத்தியில் "ஆளும்" கட்சி என்பதால் பாஜகவுடன் கை கோர்க்ககலாம்.
விலகும் வி.சி
திமுகவுடன் நெருக்கமாக நெருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவினர் பெரும்பாலும் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற குறையுடன் இருப்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்குப் போவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
திமுக- காங்கிரஸ் கூட்டணி
இதனால் தனித்துவிடப்படக் கூடிய சாத்தியம் உள்ள திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தாக கட்டாயம் நேரும்.
அதிமுக அணியில் வி.சி?
அதிமுக அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு நீடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுடன் பல மேடைகளை பகிர்ந்து கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கை கோர்க்க சாத்தியங்களும் தென்படுகின்றன.
எதிர்வரும் அரசியல் கள மாற்றங்களைப் பொறுத்தே இந்த யூகங்கள் நிஜமாகுமா என்பதும் தெரியவரும்.