மணியார்டர் சேவை நிறுத்தமா? மறுக்கும் தபால் துறை
சென்னை: சாமானிய மக்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாக இருக்கும் மணியார்டர் சேவை நிறுத்தப்பட மாட்டாது என்று இந்திய தபால் துறை விளக்கமளித்துள்ளது. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதாகவும் தபால் துறை குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், "மணியார்டர் சேவை நிறுத்தப்பட உள்ளதாக இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தனியார் நிறுவனங்களுடன் போட்டி
மணி ஆர்டர் சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால் துறை விளங்கிவருகிறது.
செல்போன் மூலம் பணம்
அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால் துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.
இன்ஸ்டன்ட் மணியார்டர்
இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்', ‘மொபைல் மணி ஆர்டர்', ‘சர்வதேச மணி ஆர்டர்' போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியதாவது:
தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. மணியார்டர்தான் எங்களின் மிகச்சிறந்த சேவையாக உள்ளது. இதனை நிறுத்தவேண்டிய அவசியம் கிடையாது. எங்களுக்கு அது தொடர்பான எந்த சுற்றறிக்கையும் இதுவரை வரவில்லை என்றார்.
உடனடி பணம்
வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில் மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும் என்றும் தபால்துறை ஊழியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications