"தீயசக்தி கருணாநிதி, பைத்தியக்காரன் விஜயகாந்த், அரக்கன் ராமதாஸ்" அதிமுக போஸ்டரால் பரபரப்பு!!
சென்னை: போஸ்டர்கள்தான் இன்றைக்கு தமிழக மக்களுக்கு பொழுது போக்காக மாறிவிட்டது. ஜெயலலிதா குவித்த சொத்துக்களைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி தொடராக எழுதினார். அதை புத்தகமாக வெளியிட்டனர் திமுகவினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், தேமுதிகவினரும் போகும் இடமெங்கும் பேசினர்.

பதவியிழந்த பின்னரும் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று கூறுவது ஏன் என்பது எதிர்கட்சியினரின் கேள்வி. இதனை போஸ்டராகவும் அடித்து ஒட்டிவருகின்றனர் எதிர்கட்சியினர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் அதிமுகவினர் பாமக, தேமுதிக, திமுகவிற்கு எதிராக ஒரே போஸ்டராக ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ராமதாஸ் - அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக அரக்கன் ராமதாஸ், அழிவுசக்தி அன்புமணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி ஊழல் அதனால் அன்புமணிக்கு சிறை என்றும் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துவதால் ராமதாஸ் சிறை செல்வார் என்றும் சித்தரிக்கிறது அந்த போஸ்டர்.
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
மக்களுடன் கூட்டணி என்று கூறுவார் விஜயகாந்த், மனைவி, மச்சானே எனக்கு மக்கள் புரியுதா? என்று கேட்டுள்ளனர் அந்த போஸ்டரில். அதைவிட பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் என்பதுதான் இந்த போஸ்டரின் ஹைலைட்
தீயசக்தி கருணாநிதி
கொள்ளையடிப்பதை குலத்தொழிலாகக் கொண்டுள்ள தீயசக்தி கருணாநிதியின் களவாணி குடும்பத்தின் ஊழல்களைப் பாரீர்... பாரீர் என்று கேட்கிறது அந்த போஸ்டர். தொடர்ந்து 2ஜி அலைக்கற்றை ஊழல், 214 கோடி கலைஞர் தொலைக்காட்சி ஊழல், 750 கோடி ஏர்செல் மேக்சிஸ் ஊழல், 400 கோடி பைபர் கேபிள் ஊழல், அண்ணா சாலையில் ஹோட்டல் கட்டிடத்தை அபகரித்தது. கிரானைட் ஊழல் என பட்டியலிட்டுள்ளனர் அதிமுகவினர்.
நீங்க மட்டும்தான் அடிப்பீங்களா? நாங்களும் அடிப்போம்ல என்று கேட்காமல் கேட்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications