பொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்
2010-ல் சென்னையில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சிரஞ்சீவி மாஸ்டர், பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக கூறியிருந்தார்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக 2010-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என கொளுத்திப் போட்டார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் சுப்பிரமணியன் சுவாமி சொல்வது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்கிற கேள்வி எழுந்தது.
ஈழ இறுதி யுத்தம் முடிந்த 2009-ம் ஆண்டு முதல் பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார் என பல முறை செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுச் சொல்வது பொட்டு அம்மானைத்தான் என நம்புகின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.
2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் இந்திய அரசால் தேடப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் ஜூனியர் விகடன் வார இதழ் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டது.
அந்தப் பேட்டியில்கூறியிருந்ததாவது:
கேள்வி: பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?'
பதில்: எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.'
கேள்வி: சரி... உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்...?'
பதில்: (பலமாக சிரிக்கிறார்) ''மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு சிரஞ்சீவி மாஸ்டர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். பொட்டு அம்மான் உயிருடனேயே இருக்கிறார் என சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்போது மறைமுகமாக கோடிட்டுக் காட்டுகிறாரோ என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.