ஒருவாரத்துக்கு பிறகு கமல்ஹாசன் வீட்டுக்கு மீண்டும் மின்சாரம்!
சென்னை: ஒரு வாரமாக மின் வினியோகம் வழங்கப்படாத நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு இன்றுதான் மீண்டும் மின் இணைப்பு கிடைத்துள்ளதாம்.
கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக காட்சி தந்தது. எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கழிவு நீர் கலந்து ரோடு முழுக்கவே கழிவு நீர் குட்டை போல காட்சி அளித்தது.
கடந்த வாரம் புதன்கிழமை மதியம் அடைமழைக்கு சாலையில் விழுந்த மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றாமல் வைத்திருந்தார்களாம். பொதுமக்களின் இடைவிடாத முயற்சி காரணமாக மரத்தை அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு வாரமாக பவர் கட்
அதேபோல கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நான்கு வீடுகளுக்கும் மட்டும் கடந்த ஏழு நாட்களாக மின்சாரம் வரவில்லையாம்.

கமல் vs ஓபிஎஸ்
சென்னை நிவாரண பணிகளில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக கமல் அளித்த பேட்டியும், அதற்கு நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த பதிலும், இதையடுத்து கமல் அளித்த விளக்கமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மின்தடை ஏற்பட்டிருந்தது பல்வேறு ஐயங்களை உருவாக்கியிருந்தது.

விளக்கம்
இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் இன்று ஒரு விளக்கம் அளித்தது.

மின் கம்பி
மின் விநியோக கழக வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டதற்கும் நடிகர் கமல்ஹாசன் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லைமழை பாதிப்பால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததே மின்விநியோகத் தடைக்கு காரணம்.

தொடர்பில்லையாம்
நடிகர் கமல்ஹாசனை குறிவைத்து எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. அந்தப் பகுதியில் வெள்ளநீர் தேங்கி இருந்தது. அதனால் மழையின்போது அறுந்துவிழுந்த மின்கம்பிகளை சரி பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதற்கும் நடிகர் கம்ல்ஹாசன் கூறிய கருத்து காரணமாக பழிவாங்கல் நடந்ததாக எழும் பேச்சுக்கும் தொடர்பே இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

பீஸ் குடுத்துட்டாங்க
இந்நிலையில், கமல் வீட்டுக்கு இன்று மின்சாரம் வந்துவிட்டதாக அவரின் செய்தித்தொடர்பாளர் மூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம், கமல் பேட்டி எழுப்பிய அதிர்வலைகளின் தாக்கம் இன்று ஓய்ந்துவிட்டது.

ஒரு டவுட்டு
மின்வாரியம் கூறியதை போல இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றே வைத்தாலும், கமல் போன்ற அதிக வரி கட்டும் விஐபிகள் வீட்டுக்கே உடனே மின்சாரம் சப்ளை செய்ய முடியாய மின்வாரியம், ஏழை மக்களை எப்படி கண்டுகொள்ளும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications