தமிழக மின்சாரத்துக்கு என்ன ஆனது.. மீண்டும் மின்வெட்டா.. நடப்பது என்ன??

Subscribe to Oneindia Tamil

- ராஜாளி

சென்னை: மின்வெட்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே உருவாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. 1996-2001 வரையிலான திமுக ஆட்சியில் நிலவிய வரலாறு காணாத மின்வெட்டு மக்களை பாடாய் படுத்தியது. அப்போது பேசிய அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அடுத்த முறை திமுக தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டு ஒரு மிகபெரிய காரணியாக இருக்கும் என்று கூறினார்.

அதே போல திமுகவும் 2001 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பிறகு ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா பெரும்போராட்டங்களை சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு இல்லையென்ற நிலையை உருவாக்கினார். அவர் உயிரோடு இருந்தவரை மத்திய அரசின் உதய் மின் திட்டத்திலும் சேரமாட்டேன் என்று உறுதியோடு இருந்தார். அவரின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் அவர் விரும்பாத திட்டங்களில் தமிழகம் தன்னை இணைத்துக் கொண்டது வேறு கதை.

is again poower cut in Tamilnadu- interview with SS.Subramani President of TNEB CITU

இப்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது என்று அபாயச் சங்கு ஊதியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். மின்துறையில் பல்வேறு வகைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளால் 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு, இதனால் நிர்வாகம் ஸ்தம்பிப்பு அதனால் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக தேவைப்படும் 13 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. ஆகவே, 3 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது. இப்பற்றாக்குறையைப் போக்க ஆயிரத்து 600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாலும், இன்னும் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மானக் கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று அறிக்கை வாசித்திருக்கிறார் ஸ்டாலின்.

இது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் தமிழ்நாடு மின்வாரிய சி ஐ டி யு – வின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியை சந்தித்தேன். அவரிடம் பேசியபோது, ஸ்டாலின் கூறியது போல தமிழத்தில் மின் பற்றாக்குறை உள்ளது உண்மைதான் என்று ஆரம்பித்தவர் நமக்கான மின்சாரத் தேவை 14500 மெகாவாட் முதல் 15 ஆயிரம் மெகாவாட் என்றும் அதில் கிட்டதட்ட 3000 மெகாவாட் மின்சாரம் பற்றாகுறை உள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து பேசியவர் தமிழக அரசு நமது மாநிலத்தை மிகை மின் மாநிலம் என்று கூறிவருகிறது. ஆனால் நமது மாநிலம் மின் உற்பத்தியில் மிகை மின் மாநிலம் அல்ல. நமது உற்பத்தி அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், அணு உலை ஆகியவற்றின் மூலமாக நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழக மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் 6000மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது தவிர மத்திய தொகுப்பிலிருந்து நமது மாநிலத்திற்கு 6000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த மின்சாரம் தவிர ஏறத்தாழ 3150 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒரு யூனிட் ரூ.5.50 காசுகள் என்ற விலையில் வாங்கப்படுகிறது. இப்படித்தான் நமக்கான தேவை சமாளிக்கப்படுகிறது.

is again poower cut in Tamilnadu- interview with SS.Subramani President of TNEB CITU

காற்றாலை மின்சாரம் கட்

இதில் நமது உற்பத்தியில் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் பருவநிலையைப் பொறுத்து ஏறக்குறைய இருக்கும். இந்த மின்சாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 3000 மெகாவாட் வரை கிடைத்து வந்தது. தற்போது காற்று இல்லாததால் இந்த மின்சாரம் தற்போது 150 மெகாவாட் வரை மட்டுமே கிடைக்கிறது.

அனல் மின்சாரம் கட்

தற்போது அனல் மின் நிலையம் மூலம் கிடைத்து வந்த மின்சாரமும் தற்போது கிடைப்பதில்லை. நமது அனல் மின் நிலையங்களை இயக்க நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி முழுவதும் வடமாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இந்த நிலக்கரி தமிழகத்திற்கு வந்து சேர்வதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. வெட்டி எடுப்பதில் ஏற்படும் கால தாமதம், இயற்கை ஏற்படுத்தும் தடைகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆகவே 20 நாட்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நம்மிடம் தற்போது சேமிப்பில் நிலக்கரி இல்லை அதோடு மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் 75ஆயிரம் டன் நிலக்கரியில் கிட்டத்தட்ட பாதியளவு நிலக்கரி நமக்கு வரவில்லை. இதனால் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யபடும் நிலையங்களை நிறுத்தியுள்ளார்கள்.

is again poower cut in Tamilnadu- interview with SS.Subramani President of TNEB CITU

இதுபோன்ற காரணங்களால் மின்பற்றாக்குறை தற்போது அதிகமாகியுள்ளது. 3150 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 3000மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவி வருகிறது. நுகர்வோரில் தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் High Tension consumer என்பவர்கள்தான் நமது மின்சாரத்தை அதிகளவில் உபயோகப்படுத்தி வருகிறார்கள். மின்வாரிய புள்ளிவிவரப்படி 9299 நுகர்வோரில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மின்வாரியத்திடம் மின்சாரம் வாங்குவதில்லை. இதனால் மின்வாரியத்திற்கான ஒரு வருட மொத்த வருவாய் 45ஆயிரம் கோடிகள். இதில் 60% வருவாய் வணிக நுகர்வோர்களாலும் HT நுகர்வோராலுமே வருகிறது. இவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் மின்வாரியத்திற்கு வெளியே மின்சாரம் வாங்குவதால் மின் வாரிய வருவாய் பெருமளவு குறைந்து விட்டது இந்த காரணங்களால் தமிழ்நாடு மின்சாரவாரியம் செத்து மடியும் ஒரு நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சியூட்டுகிறார்

ஆக நமது அரசுகளுக்கு தொலைநோக்குப் பார்வையில் நமது தேவைகளுக்கான திட்டங்கள் இல்லைஎன்றாலும் உடனடி தேவைகளுக்கான திட்டங்களையாவது தெளிவாகத் தீட்ட வேண்டியது அவசர அவசியம். மின் கட்டணத்தில் சாமானியர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் மின்வாரியம் அடுத்து வரும் மாதங்களில் மின்சாரத்தை தடை செய்து ஷாக் கொடுக்காமல் இருந்தால் சரிதான்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+