கோவை, திருப்பூர்... மீண்டும் திரும்பியது மின்வெட்டு
கோவை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மின் வெட்டு திரும்பியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முறை வைத்து 6 மணி நேர அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
ஏற்கனவே நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின்வெட்டு அமலாவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொழில் மாவட்டங்களான கோவை, திருப்பூரில் 6 மணி நேர மின் தடை அமல்படுத்தப்பபடுவதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

விசைத்தறிக் கூடங்கள் பாதிப்பு
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்லடம், சோமனூர், பள்ளபாளையம், தெக்கலூர், அவிநாசி, கருமத்தம்பட்டி, சூலூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன.

5 லட்சம் தொழிலாளர்கள்
இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தினசரி 60 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.

காலையில் 3 மணி நேரம்
கடந்த 9ம் தேதி முதல் கோவை புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டப்பகுதிகளில் தினசரி காலை 3 மணி நேரம், பகலில் 2 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் என ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மீண்டும் மின்வெட்டு ஏற்படுகிறது.

உற்பத்தி பாதிப்பு
இதனால், ஜவுளி துணி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. உற்பத்தியாளர்களுக்கு 20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கூலி குறைந்தது
விசைத்தறி தொழிலாளர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் அவர்கள் உற்பத்தி செய்யும் துணியை மீட்டர் கணக்கில் அளந்து கூலி கணக்கிடப்படுவதால், அவர்களுக்கு கூலி குறைந்துள்ளது.ஏற்கனவே, விசைத்தறிகளுக்கு மின்மீட்டர் பொருத்துவதால் மின் கட்டண உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நசியும்
தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள மின் தடையால் இத்தொழில் மேலும் நலிவடையும் என விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications