மின்பற்றாக்குறை குறைந்து விட்டது... ஓ.பி.எஸ். தரும் "ஸ்வீட் ஷாக்"!
சென்னை: தமிழ்நாட்டில் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-
விவசாயம் :
விவசாயத்துறைக்கு ஜெயலலிதா அரசு மிகுந்த முன்னுரிமையினை அளித்ததன் பயனாக 2010-11-ல் 75.95 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 2014-15-ல் 122.86 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறையின் பொருளாதார வளர்ச்சி வீதமும் 2013-14, 2014-15-ம் ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறைக்கு 2010-11-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 2,072.43 கோடி ரூபாய்தான். ஆனால் இத்துறைக்கான 2015-16-ம் ஆண்டின் ஒதுக்கீடு 6,613.68 கோடி ரூபாய் ஆகும்.
ஜெயலலிதாவின் அரசு கடந்த 4 ஆண்டுகளாக விவசாய சாகுபடி பரப்பளவையும், உற்பத்தித் திறனையும், விவசாயிகளின் வருவாயினையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு :
வேலைவாய்ப்பைப் பெருக்க, தொழில் துறையை ஜெயலலிதா அரசு சிறப்பாக ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்திட, மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தை, செயல்படுத்த ஜெயலலிதா அரசு, முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களின் மாநாட்டை, மே 23-24-ல் நடத்த ஜெயலலிதா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெரும் தொழில்களுக்கும், சிறு குறு தொழில்களுக்கும் திட்ட அனுமதிகளை எளிமைப்படுத்த, தனித்தனியே ஒற்றை சாளர இணையதளங்கள் 2015-16-ல் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் இத்தகைய பயிற்சிகளை 2 லட்சம் நபர்களுக்கு அளிப்பதற்கு ஜெயலலிதா அரசு இலக்கிட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாடு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 100 கோடி ரூபாய் 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறை :
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றபோது மின்பற்றாக்குறை எவ்வாறு இருந்தது என்பதையும், அதன் பிறகு எவ்வாறு அது சரி செய்யப்பட்டு வருகிறது என்பதையும், அதனால் எந்த அளவிற்கு மின் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
குறைந்துள்ளது :
2011-ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பொழுது மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் ஆனால் மின் வழங்கல் திறன் 8 ஆயிரம் மெகாவாட்டாக மட்டுமே இருந்தது. மின் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. தற்போது தமிழ்நாட்டின் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இதில் இருந்து எந்த அளவுக்கு மின் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications