கிரானைட் மோசடி.. தயாநிதி அழகிரி ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த அரசு எதிர்ப்பு
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன், தயாநிதி அழகிரியின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிரானைட் முறைகேடு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டு துரை தயாநிதி மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 2012 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி அன்று மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, பாஸ்போர்ட்டை மேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்பின்பு, மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மேலூர் நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அன்று துரை தயாநிதியிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தது.
அப்போது, வெளிநாடு செல்வதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்பின்பு, வெளிநாட்டுக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக தகவல் தெரிவித்தால் போதும் என்று நிபந்தனை மாற்றப்பட்டது.
இந்த நிபந்தனையை முழுமையாக தளர்த்தக்கோரி, துரை தயாநிதி மதுரை உயர் நீதிமன்றத்தில் மறுபடியும் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போதும், திரும்பி வந்த பிறகும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்பதில் சிரமம் உள்ளது. என் மீதான கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளேன்.
எனவே, வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் பயண விவரங்களை மேலூர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இம்மனு மீதான பதில் மனுவினை அரசு தரப்பு இன்று தாக்கல் செய்தது. அம்மனுவில், சகாயம் குழுவின் விசாரணையானது துரை தயாநிதியின் கிரானைட் குவாரியிலும் நடைபெற உள்ளது. விசாரணை நடைபெற உள்ள காரணத்தினால் நிபந்தனைகளைத் தளர்த்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications