கர்நாடக தலைவர்கள் மீது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர வேண்டும்.. பி.ஆர். பாண்டியன்
மன்னார்குடி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து கூறி அவமதிக்கும் கர்நாடகா மாநில முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் சட்ட விரோத நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காவிதி நதிநீர் பங்கீட்டு வழக்கில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், கர்நாடாக மாநிலம், தமிழகத்திற்கு 27ம் தேதி வரை 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு செயல்படுகிறது.
இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், காவிரி பிரச்சனையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் ஓழுங்காற்றுகுழு அமைக்காமல் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து காலங்கடத்தியதாக குற்றம்சாட்டினார்.
விவசாய சங்கங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசால் தொடரப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கின் மீது 4 வாரங்களுக்குள்ளாக அவ்விரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டதோடு கர்நாடக அரசு ஏற்கனவே வழங்கியதுபோக விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் வரும் 27ம் தேதி வரை தண்ணீர் வழங்கவேண்டும் என கர்நாடகவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்து கர்நாடகம் தற்போது கலவரத்தையும் தூண்டி விட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். தண்ணீர் திறக்க இயலாது என்றும் அம்மாநில முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் தீர்ப்பை அவமதித்து பேசி வருகின்றனர். இதனால் தேச ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று பி.ஆர். பாண்டியன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கர்நாடக அரசின் சட்ட விரோத நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு அவசர வழக்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கர்நாடகாவை சேர்ந்த முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற முரண்பாடான கருத்துக்களை கூறுகின்ற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுபவர்களாக கருதி, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் நடவடிக்கையாக எதிர்காலத்தில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட தகுதியற்றவர்கள் என்று அறிவித்திட வேண்டும்.
மத்திய அரசும் வேடிக்கை பார்க்காமல் கர்நாடக அரசின் சட்ட விரோத செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட முன் வரவேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications