மாணவி பிரதீபா உடலை வாங்க உறவினர்கள் விதித்த நிபந்தனை.. அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர் உறுதி!
மாணவி பிரதீபா உடலை வாங்க உறவினர்கள் விதித்த 3 நிபந்தனைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
Recommended Video

விழுப்புரம்: மாணவி பிரதீபா உடலை வாங்க உறவினர்கள் விதித்த 3 நிபந்தனைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நேற்று வெளியானது. நிலையில் தமிழகத்தில் இருந்து 45336 மாணவ, மாணவிகள் மட்டுமே மருத்துவ படிப்புகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ள போதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் பாதிக்கு பாதி கூட தேர்ச்சி சதவிகிதம் இல்லை.

மாணவி தற்கொலை
இதனால் மருத்துவ கனவில் இருந்த மாணவ, மாணவிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வில் தகுதி பெறாததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட தொழிலாளியின் மகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் கல்லூரியில் இடம்
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அதில் பிரதீபாவால் சேர முடியவில்லை.

வெறும் 39 மதிப்பெண்களே
இந்த நிலையில் அரசு கல்லூரியில் சீட் பெறும் வகையில் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

3 நிபந்தனைகள்
இந்நிலையில் மாணவி பிரதீபா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். உடலை வாங்க வேண்டும் என்றால் 3 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நீட் தேர்வு ரத்து
உயிரிழந்த பிரதீபாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாணவி பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 நிபந்தனைகளை விதித்தனர்.

உடற்கூறாய்வு கூடாது
3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பிரதீபாவின் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். நீட் தேர்வு ரத்து செய்யும் வரை பிரதீபாவின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் டூ 1125 மார்க்
இந்நிலையில் பிரதீபாவின் பெற்றோரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நிபந்தனைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். மேலும் அவர்களின் நிபந்தனைகளை கோரிக்கை மனுவாக ஆட்சியர் பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுவை ஆட்சியர் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பிரதீபாவின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

பிளஸ் டூ 1125 மார்க்
உயிரிழந்த பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications