ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டுக்கு பேரழிவு என்கிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ்?
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்குப் பேரழிவு என சாடுகிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ் என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என நடிகர் பிரகாஷ்ராஜ் எச்சரிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர்கள் தலைவராவது என்னுடைய நாட்டுக்குப் பேரழிவு என எச்சரித்திருக்கிறார்.
தமிழகத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே அரசியல் களத்தில் குதித்துவிட்டனர். கமல்ஹாசன் அரசியல் ரீதியாக தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.

தனிக் கட்சி தொடங்கும் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த், சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என கூறி அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டார். அத்துடன் டிசம்பர் 12-ந் தேதி அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் கமல் கட்சி
அதேபோல் கமல்ஹாசன் கடந்த 7-ந் தேதியன்று தமது பிறந்த நாளன்று ஆப்களை வெளியிட்டிருந்தார். தாம் கட்சி தொடங்கப் போவதாகவும் ஊடகங்கள் நெருக்கடி கொடுப்பதால் உடனே கட்சி பெயரை அறிவிக்க முடியாது...காத்திருங்கள் என கூறியிருந்தார்.

மத்திய அரசை சாடும் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜூம் கூட மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் பிரதமர் நரேந்திர மோடியை மிகச் சிறந்த நடிகர் என காட்டமாக சாடியிருந்தார். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையிலும் மத்திய அரசை விமர்சித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

நடிகர்கள் தலைவராக எதிர்ப்பு
இந்நிலையில் திடீரென நடிகர்கள் தலைவர்களாவது நாட்டுக்குப் பேரழிவு என பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளில் நடிகர்கள் சேருவதை விரும்பவில்லை எனவும் பிரகாஷ்ராஜ் சாடியுள்ளார்.

ரஜினி கமலுக்கு எதிர்ப்பு
பிரகாஷ்ராஜின் இந்த பேட்டி ரஜினி, கமல்ஹாசனை குறிவைத்து கொடுக்கப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதாவது நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவைத் தரும் என்கிறாரா பிரகாஷ்ராஜ் என்பதுதான் பிரதான கேள்வி.












Click it and Unblock the Notifications