நிறைமாத கர்பிணியை கொளுத்திய கணவன்: இறந்த சிசுவை பிரசவித்த பின் பெண் மரணம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் மண்ணெண்ணையை ஊற்றி கணவர் தீ வைத்ததில் தீக்காயமடைந்த நிறைமாத கர்ப்பிணி, இறந்த சிசுவை பிரசவித்து விட்டு, தானும் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் திரையங்காட்டை சேர்ந்தவர் விக்டர் பாஸ்கர், 35. விவசாய தொழிலாளி. இவரது மனைவி தங்கத்துரை மேரி, 30. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் தங்கத்துரை மேரி கர்ப்பம் அடைந்து, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த 25ம் தேதி கணவர் விக்டர் பாஸ்கருக்கும், கர்ப்பிணியான தங்கத்துரை மேரிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கணவர் விக்டர் பாஸ்கர், மனைவி மீது மண்எண்ணையை ஊற்றி வைத்தார். இதில் காயமடைந்து, அலறி துடித்த தங்கத்துரை மேரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணி மேரிக்கு கடந்த 4ம் தேதி ஆண் சிசு இறந்து பிறந்தது. இதனால், உறவினர்கள், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள், சிகிச்சை பெற்று வந்த தங்கத்துரை மேரியும் கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, நாகை ஆர்.டி.ஓ., சிவப்பிரியா நேரடியாக விசாரணை நடத்தினார். இதையடுத்து, கொலைவழக்கு பதிந்து, விக்டர் பாஸ்கரை, கரியாப்பட்டணம் போலீஸார் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அதிரடியாக கைது செய்தனர். கர்ப்பிணிப் பெண்ணை தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications