நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவர் வைகோ.. பிரேமலதா குற்றச்சாட்டு
நாள்தோறும் ஒவ்வொரு கருத்தைச் சொல்பவர் வைகோ என்று பிரேமலதா வைகோ மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறி வருபவர் வைகோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வைகோ மீது குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள வைகோ, விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி மநகூடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக தேமுதிக மநகூடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தத் தேர்தலின் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.
தற்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மநகூவில் உள்ள 4 கட்சிகளுமே போட்டியிடவில்லை என்று பல குழப்பங்களுக்கிடையில் அறிவித்தது. தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலின் போது, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததற்கு வருத்தப்படுவதாக வைகோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரேமலதாவிடம், விஜயகாந்த் முதல்வர் வேட்பாளாராக அறிவித்ததற்கு வைகோ வருத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த பிரேமலதா, நாள்தோறும் ஒரு கருத்தைக் கூறி வருபவர் வைகோ என்றும், தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது வைகோதான், அதனால் இதுகுறித்து அவரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி தேர்தலில் விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றும், இன்றிலிருந்து 17ம் தேதி வரை தான் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.