எம்.ஜி.ஆர் பேச்சைக் குத்திக் காட்டி விஜயகாந்த்தை உயர்த்திப் பேசும் பிரேமலதா!
தஞ்சாவர்: எம்.ஜி.ஆருக்குக் குண்டடி பட்டதும் அவர் புரிவது போலவா பேசினார். அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகவில்லையா. அதேபோலத்தான் விஜயகாந்த்தும் புரியாமல் பேசினாலும் கூட பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக உள்ளார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த கையோடு ஊர் ஊராகப் பிரசாரம் செய்து வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். நேற்று தஞ்சாவூரில் அவர் பிரசாரம் செய்து பேசினார்.
அவரது பேச்சின்போது எம்.ஜி.ஆரின் பேச்சையும், விஜயகாந்த் பேச்சையும் ஒப்பிட்டுப் பேசினார். எம்.ஜி.ஆரும், விஜயகாந்த்தும் ஒன்றுதான் என்பது போல இருந்தது அவரது பேச்சு.
அவரது பேச்சிலிருந்து...

எம்.ஜி.ஆர் பேச்சு புரிந்ததா
குண்டடி பட்ட பின்னர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு மக்களுக்குப் புரிந்ததா. அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாமல் பேசினார். ஆனால் மக்களிடையே எம்.ஜி.ஆரின் பேச்சு பிரபலமானது.

அதேபோல
அதேபோல விஜயகாந்த்தின் புரியாத பேச்சும் கூட பட்டி தொட்டியெங்கும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. எனவே அவரது உடல் நிலை குறித்து கேள்வி எழுப்புவதை விட்டு விடுங்கள்.

யாரைப் பார்க்கிறார்கள்
அதிமுகவில் நேர்காணல் நடப்பதாக சொல்கிறார்கள். தினசரி செய்தும் வருகிறது. தினசரி அதிமுகவினர் பைல்களோடு நடப்பதைப் புகைப்படமாக போடுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரைப் பார்க்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா. இதுவரைக்கும், ஒரு போட்டோவாவது பத்திரிகைகளில் வந்திருக்கிறதா.

ஏன் ரகசியம்
நேர்காணலை ஏன் ரகசியமாக நடத்த வேண்டும். விருப்ப மனு கொடுத்த எல்லாரையும் அழைத்து, ஜெயலலிதா உட்கார்ந்து பேச வேண்டும்; அதற்கு பெயர் தான் நேர்காணல். திமுக - தேமுதிக நேர்காணல் அப்படித்தான் நடந்தது.

சுவரைப் பார்த்து பேசுகின்றார்களா
அதிமுக நேர்காணலுக்கு போகிறவர்கள், ஜெயலலிதாவை பார்த்து பேசுகின்றனரா அல்லது சுவரை பார்த்து பேசிவிட்டு திரும்புகின்றனரா என்பது யாருக்கு தெரியும்? கட்சிக்காரங்களை சந்திக்க முடியாமல், வீட்டிலேயே ஜெயலலிதா முடங்கி கிடப்பது ஏன்; அதை பற்றி எந்த பத்திரிகையாவது செய்தி வெளியிட முடியுமா?

விஜயகாந்த் எங்கே
விஜயகாந்த் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் போய் விட்டார் என சில பத்திரிகைகள் பொய்யாக எழுதுகின்றன. அவர், சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில், தேர்தல் பிரசாரம் குறித்த திட்டங்களை வகுத்து வருகிறார். நான் இல்லாமல், அவர் பக்கத்து ஊருக்கு கூட சென்றதில்லை என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications