அநாகரீக பிரச்சாரத்திற்கு துவக்க புள்ளி.. என்ன இருந்தாலும் பிரேமலதா இப்படி பேசியிருக்க கூடாது!
சென்னை: தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் நடைபெற்ற 'திருப்புமுனை மாநாடு' எதை திருப்பியதோ இல்லையோ பல்வேறு சர்ச்சைகளுக்கு தூபம் போட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் கூட்டணியை அறிவிக்கப்போகிறார் விஜயகாந்த் என்று, உருவாக்கப்பட்ட, எதிர்பார்ப்போடு, வேடலில் பல ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் கூடியது திருப்பு முனை மாநாடு.
கட்சி தலைவர் விஜயகாந்த் கூட்டம் தொடங்கியபோது வரவில்லை என்றாலும், அவர் இடத்தில் நின்று மாநாட்டை நகர்த்திக்கொண்டிருந்தது பிரேமலதா விஜயகாந்த்தான்.

தெறிக்கவிட்ட பிரேமலதா
மாநாட்டில் விஜயகாந்த் பேச்சைவிட, பிரேமலதா பேச்சுதான் ரொம்ப ஷார்ப்பாகவும், தொண்டர்களை தட்டி எழுப்புவதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்களை மொத்தமாக பார்த்த உணர்ச்சி மிகுதியிலோ என்னவோ, பிரேமலதா வரம்பு மீறி வார்த்தைகளை தெறிக்கவிட்டார் என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

அதிகநேரம்
மாநாட்டில் தலைவரான விஜயகாந்த்தைவிட வெகுநேரம் பேசியது அண்ணியார் என அக்கட்சியினர் பாசமாக அழைக்கும் பிரேமலதாதான். அதில் பெரும்பாலும், முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக விமர்சனம் செய்வதாகவே இருந்தது.

ஜெயலலிதா வாழ்க்கை
ஆட்சியை விமர்சனம் செய்வதோடு நிறுத்தியிருந்தால், பிரச்சினையில்லை. பிரேமலதா பேசும்போது, ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கை குறித்தும், மோசமாக அர்ச்சனை செய்தார்.

அம்மா.. அம்மா
அமைச்சர்கள், அடிமைகளை போல நடத்தப்படுவதாக விமர்சனம் செய்து ஆக்ரோஷமாக பேசினார் பிரேமலதா. அம்மா.. அம்மா.. என அமைச்சர்கள் குனிந்து, கும்பிடு போட்டு வாழ்க்கை நடத்துவதாக கேலி செய்தார் பிரேமலதா.

தேமுதிகவில் சுயமரியாதை
தேமுதிகவில் காலில் விழும் கலாச்சாரம் கிடையாது என்றும், அனைவரும் சம உரிமையோடு நடத்தப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார் பிரேமலதா.

மனைவிகளே மதிக்கமாட்டார்கள்
ஆண் மகன் என்றால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்று கூறிய பிரேமலதா, அதிமுகவில் குனிந்து கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும் ஆண்களை, அவர்களின் மனைவிமார்களே மதிக்க மாட்டார்கள் என்று கேலி செய்தார்.

மனைவி கேலி
"மனைவியிடம் கொஞ்சம் எகிறி பேசினாலே, உங்க வீராப்பெல்லாம் இங்கதான், அங்க, உங்க அம்மா கிட்ட கும்பிடு போட்டுவிட்டுதானே வாரீர்கள்" என்று, அதிமுகவினரின் மனைவிமார்கள் கேலி செய்வார்கள் என்று பிரேமலதா கிண்டல் செய்தார்.

இறங்கி பேசிய பிரேமலதா
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இதற்கு மேல் பிரேமலதா பேசியதுதான் ஹாட் டாப்பிக். "குழந்தை குட்டிகளோடு வாழ்பவர்களுக்குத்தானே ஒரு ஆண்மகனுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியும்" என்று கூறினார் பிரேமலதா.

போராட்டம் வேண்டாம்
பிரேமலதாவின் இந்த பேச்சு அதிமுகவினரை தூண்டிவிட்டுள்ளதாம். ஆயினும் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரேமலதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, அவருக்கு விளம்பரம் தேடி தரவேண்டாம் என்பது மேலிடத்து கட்டளை என்கிறது அதிமுக வட்டாரம்.

சமூகவலைத்தளங்களில்
இருப்பினும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில், உளவுத்துறையை பயன்படுத்தி பிரேமலதாவுக்கு எதிராக மக்களை கோபப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் ஆளும் தரப்பு. அதற்கு பக்காவாக பிளான் போட்டு கொடுத்துள்ளது உளவுத்துறை.

மெருகேற்றிய உளவுத்துறை
பிரேமலதா பேச்சை கொஞ்சம் 'மெருகேற்றி', அவர், திருமணமாகியும் குழந்தையில்லாத பெண்களை பார்த்து, ஆண்களை மதிக்கத்தெரியாதவர்கள் என்று பேசியுள்ளார் என்று வாட்ஸ்அப்பில் கிளப்பிவிட்டுள்ளனர் உளவுத்துறையினர்.

வாட்ஸ்அப் தகவல்
பெண்களை, ஆண்களுக்கு அடிமை போல நடக்க வேண்டும் என்று பிரேமலதா விரும்புகிறார், குழந்தையில்லாத பெண்களை இழிவு செய்துவிட்டார், இவரது கட்சிக்கா ஆட்சி? என்ற வாக்கியங்களுடன் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பி வருகிறதாம் உளவுத்துறை.

பிரேமலதாவுக்கு பின்னடைவு
ஜெயலலிதா தரப்பில் இருந்து வரும் மறைமுக பதிலடியால் கலங்கிப்போயுள்ளது தேமுதிக வட்டாரம். நேரடியாக போராட்டம் நடத்துவார்கள், விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்திருந்த பிரேமலதாவுக்கு இது பின்னடைவாக போயுள்ளது.

துப்பியதும் நியாயம்
பிரேமலதா தனது பேச்சில், பத்திரிகையாளர்களை பார்த்து விஜயகாந்த் துப்பியதை கூட பெருமையாக பேசிய அநாகரீகமும் அரங்கேறியது. "ஆளும் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகிறார்கள் என்பதால், பத்திரிகையாளர்களை பார்த்து த்தூ என கூறிவிட்டார்" என்று போகிற போக்கில் கணவரின் செயலை நியாயப்படுத்தி பேசினார் பிரேமலதா.

தூக்கியடிப்பது டிரெண்ட்டாம்
த்தூ என துப்பியது மட்டுமின்றி, டெல்லியில் வைத்து பத்திரிகையாளர்களை பார்த்து தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க.. என கூறியதையும் பெருமையாக பேசிய பிரேமலதா, அவர் அப்படி பேசிய வாசகங்கள்தான் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக மாறியதாக கூறி, அதையும் வரவு கணக்கில் எழுதிக்கொண்டார் பிரேமலதா.

அநாகரீக பிரச்சாரம்
முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அநாகரீக சொற்களை அவிழ்த்துவிட்டதோடு, கணவர் செய்த அநாகரீக செயல்களுக்கு வக்காலத்தும் வாங்கி, பெருமை பேசிய பிரேமலதா, இந்த சட்டசபை தேர்தலுக்கான, அநாகரீக பிரச்சார யுக்திக்கு துவக்க புள்ளி வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போ பாருங்க சமூகவலைத்தளத்தை
'பத்திரிகையாளர்களை துப்பியதற்கு 99 சதவீதம் மக்கள் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்' என்று ஜம்பமாக பேசி, தப்புக்கு நியாயம் கற்பித்த பிரேமலதாவுக்கு தெரியுமா.., அவர் பேசிய அதே மேடையில், அடுத்ததாக பேசிய விஜயகாந்த்தின் 'உரையை' அதே சமூக வலைத்தளத்தில், 99 சதவீதம் மக்கள் கழுவி ஊற்றியது என்பது?. தெரியாது என்றால், #திருப்புமுனைமாநாடு என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் போட்டு தேடிப்பாருங்கள்.

ஊருக்குத்தான் உபதேசம்
அதிமுகவினர் ஜெயலலிதா காலில் விழுவதை பிரேமலதா கிண்டலடிந்து ஒரு சில நிமிடங்களில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில், விழா மேடையில், விஜயகாந்த் காலில், கட்சி நிர்வாகி அனகாபுத்துர் முருகேசன் விழுந்து கும்பிட்டார். அவரை காலில் விழவிடாமல் விஜயகாந்த் தடுக்கவும் இல்லை, விழுந்ததும் எந்திரியுங்கள் என கூறவும் இல்லை. இதைப் பார்த்த பிரேமலதா முகத்தில் அப்போது ஈ ஆடவில்லை.












Click it and Unblock the Notifications