பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சூரிய பூஜை... பிரேமலதா பங்கேற்பு - ஸ்ரீரங்கத்திலும் தரிசனம்
திருச்சி: தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களில் பிஸியாக பேசி வரும் பிரேமலதா, திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரிய பூஜையில் பங்கேற்றார். இதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கும் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. வேறு எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், இங்கு ஸ்ரீபிரம்மா தனிச்சந்நிதியில் அருளாட்சி நடத்துகிறார்.
பிரம்மா தன் சாபம் தீருவதற்காக, இந்தத் தலத்தில் 12 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து தவமிருந்து வழிபட்டார். இதனால் சிவனார் பிரம்மாவுக்கு சாபம் தீர்த்தருளினார். அத்துடன் இழந்த பதவியையும் தந்தருளினார்.
அப்போது சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இங்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் ஸ்ரீபிரம்மதேவன்.
தலையெழுத்து மாறும்
வியாழக்கிழமை, பிரதோஷம் மற்றும் நம் நட்சத்திர நாளில் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், பிரம்மா நம் தலையெழுத்தை திருத்தி அருள்வார் என்பது ஐதீகம்! மேலும் இந்தத் தலத்தில் ஸ்ரீபதஞ்சலி முனிவரின் திருச்சமாதியும் அருகில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளது சிறப்புகளில் ஒன்று.
பங்குனியில் விஷேசம்
பங்குனி மாதத்தில் பத்துநாள் விழாவாக பிரம்மோத்ஸவம் நடைபெறும். இந்த விழாவானது சமீபத்தில் விமரிசையாக நடந்தேறியது.அதேபோல், பங்குனி மாதத்தில் அதாவது மார்ச் 28, 29, 30) ஆகிய தேதிகளில், காலை பூஜையின் போது, சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத் திருமேனி விழுவது அதிசயிக்கத் தக்கதாகச் சொல்கிறார்கள்.
சூரியன் தரிசனம்
சூரியக் கதிர்கள் விழுவதை பாஸ்கர பூஜை என்பார்கள். முடிந்தால் அந்த நேரத்தில் தரிசிப்பது சிறப்பு. இயலாதவர்கள், அந்த நாளில் இங்கு வந்து சிவபார்வதியையும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசிப்பது பலன் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.
பக்தர்கள் வருகை
இந்த மூன்று நாட்களும் நடந்த பாஸ்கர பூஜையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். நிறைவு நாளான இன்று கூட்டம் இன்னும் அதிக அளவில் இருந்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்திருந்தனர்.
பிரேமலதா தரிசனம்
விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக மகளிரணி தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த், திடீரென கோயிலுக்கு வந்தார். ஸ்ரீபிரம்மபுரீஸ்வர சந்நிதியிலும் ஸ்ரீபிரம்மாவின் சந்நிதியிலும் மனமுருக சில நிமிடங்கள் கண்கள் மூடி பிரார்த்தித்தார். பிறகு தன் கணவர் விஜயகாந்த் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சித்து வேண்டிக் கொண்டார்.
தேர்தல் வெற்றிக்காக வேண்டுதல்
திருப்பட்டூருக்கு வந்தால் திருப்பம் நிச்சயம் என்பார்கள். தலையெழுத்தையே திருத்தி எழுதி அருள்கிற ஸ்ரீபிரம்மா, இந்தத் தேர்தலில் நல்லவிதமாக திருத்தி எழுதி, வெற்றிக் கனியைத் தரவேண்டும் என வேண்டிக்கொண்டதாக ஆலய வட்டாரத்தில் தெரிவித்தனர்.
ஸ்ரீ ரங்கத்தில் தரிசனம்
திருச்சியில் சுற்றுப்பயணம் செய்த பிரேமலதா ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்கும் சென்று மனமுருகி வேண்டினார். விஜயகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார் என்று தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.