சேகர்பாபு மனைவிக்காக ஆகம விதி மீறல்? சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சாமி கோவிலில் என்ன நடந்தது?
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மனைவி சாந்தி நேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் சேகர்பாபுவின் மனைவி சாந்தியின் சாமி தரிசனத்துக்காக ஆகம விதிகளை மீறி நீண்டநேரம் நடை அடைக்கப்படாமல் இருந்ததாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்திப்பெற்ற சங்கரநாராயணர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதோடு பங்குனி, சித்திரை விழா, ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். அப்போது வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் தான் நேற்று சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள 3 சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். அவருடன் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது சர்ச்சை என்பது கிளம்பி உள்ளது. அதாவது அமைச்சர் சேகர்பாபு மனைவி சாந்திக்காக கோவில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. பொதுவாக கோவிலில் உச்சிகாலபூஜை என்பது மதியம் சுமார் 12 மணியளவில் நடக்கும். அதன்பிறகு மதியம் 1 மணிக்குள் நடை சாத்தப்படும். நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடியாது.
அதன்பிறகு மாலை 4 மணிக்கு தான் நடை திறக்கப்படும். ஆனால் அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி தரிசனம் செய்வதற்காக தாமதமாக நடை சாத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கோவிலுக்கு நடை சாத்தும் நேரத்துக்கு பிறகு சேகர்பாபு மனைவி சாந்தி வந்துள்ளார். ஆனால் அவர் தரிசனம் முடிக்கும் வகையில் அர்ச்சகர்கள் நடையை சாத்தவில்லை. அர்ச்சகர்கள் காத்திருந்து சேகர்பாபு மனைவி சாந்தி தரிசனத்தை முடித்த பிறகு தாமதமாக நடையை அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications