ஆவினைத் தொடர்ந்து தனியார் பால் விலையும் உயருகிறது - லிட்டருக்கு ரூ.8 உயருகிறது!
சென்னை: ஆவினை அடுத்து தனியார் நிறுவனங்களின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.8 வரை உயர உள்ளது.
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் சமீபத்தில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதேபோல பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.5 அதிகரித்து அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆவின் பால் விலை உயர்வை அடுத்து தனியார் பால் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்.
தனியார் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் 8 வரை உயர்த்த அனைத்து நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. அதேபோல பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி, விவசாயிகளை ஈர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
தமிழகத்தில் திருமலா, ஹெரிடேஜ், தொட்லா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் தனியார் பால் விற்பனையில் முன்னணியில் உள்ளன. கடந்த மாதம்தான் இந்த நான்கு நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.2 விலையை உயர்த்தியிருந்தன. இந்த ஆண்டில் இதுவரை தனியார் பால் நிறுவனங்கள் 3 முறை விலையை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications