மெரினா, அலங்காநல்லூர், வாடிப்பட்டி.. விடிய, விடிய தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்!
மதுரை: வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சென்னை மெரினா என தமிழகத்து ஜல்லிக்கட்டு போராட்ட களம் மூன்று இடங்களில் மையம் கொண்டுள்ளது. இந்த போராட்டங்கள் விடிய, விடிய தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே நேற்றிலிருந்து தொடர்ந்து 21 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் இன்று காலை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் வாபஸ்
இதில் முன்னதாக 48 பேர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது மேலும் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 157 பேர் மண்டபத்திலிருந்து வெளியேற சொல்லியும் மறுப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டும் கைவிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில், சென்னை மெரினா பீச் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பவர்களும் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரவு முழுக்க போராட்டத்தில் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே மெரினாபீச்சிலும் போராட்டம் விடிய விடிய தொடர உள்ளது.

போராட்ட களம்
அதேபோலத்தான் அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனவே இன்று இரவு 2வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர உள்ளனர். தமிழகத்தின் மூன்று போராட்ட மையப்புள்ளி களங்களும் தகித்து கொண்டே உள்ளன.

ஒடுக்க முயற்சி
அதேநேரம் போராட்டத்தை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் அழைத்து அவர்களை மிரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. இருப்பினும் போராட்டங்கள் நிற்பதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications