பிக்பாஸ் தங்க தமிழ் செல்வன்... புதுச்சேரி ரிசாட்டில் இருந்து சுந்தர்ராஜ் எம்எல்ஏ அவுட்?
சொகுசு ரிசார்ட் அறையில் 10 நாட்களாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.சுந்தர்ராஜ் இன்று ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய
புதுச்சேரி: தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.சுந்தர்ராஜ் இன்று ரிசார்ட்டிலிருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் புதுவை சின்னவீராம் பட்டினத்தில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்கள் இன்றுடன் புதுச்சேரி வந்து 10 நாட்கள் கடந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி 100 அடி சாலையிலுள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர். மீண்டும் ஒரேநாளில் அவர்கள் சின்னவீராம்பட்டினம் ரிசார்ட்டுக்கே வந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து 10 நாட்களாக ஹோட்டலிலேயே அடைபட்டு கிடப்பதால் ஒருவித சோகத்துடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று தெரிவிக்கிறார்கள் புதுச்சேரி அஇஅதிமுகவினர்.
அறையிலே முடங்கிக்கிடக்கும் எம் எல் ஏக்கள்
ரிசார்ட்டில் உள்ள 20 எம்.எல்.ஏக்களில், ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் நடைப் பயிற்சி, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது ஆகியவற்றுக்காக வெளியே வருகிறார்கள். பெண் எம்.எல்.ஏக்கள் உட்பட மற்றவ எம்.எல்.ஏக்கள் அனைவரும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
'தல' தங்க தமிழ்ச்செல்வன்
புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்க தமிழ்செல்வன் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். அவர் சொல்கிறபடிதான் அனைவரும் கேட்கவேண்டும் என்கிற நிலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
வெளியே செல்லும் அதிகாரம்
ரிசார்ட்டிலிருந்து தங்க தமிழ்செல்வன் மட்டும் தான், காரில் வெளியே சென்று வருகிறார். 4 நாட்களுக்கு முன்புகூட, அவரின் சொந்த ஊருக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார் தங்க தமிழ்ச்செல்வன். நேற்றுக்கூட சென்னைக்குப் பயணமானார்.
அனுமதி இல்லை
அவரைத்தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் யாரும் வெளியே செல்லவில்லை. வெளியே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது எம் எல் ஏக்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குப்போகணும்.. அடம்பிடிக்கும் எம் எல் ஏக்கள்
தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் சிலர், 10 நாட்கள் ஆகிவிட்டது நாங்கள் வீட்டுக்குப்போக வேண்டும் எங்களை வெளியே விடுங்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி கொடுக்க தினகரன் ஆட்கள் தயாராக இல்லை.
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் மாயம்
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் திடீரென இன்று ரிசார்ட்டில் இருந்து அதிரடியாக வெளியேறினார். அவர் காரில் புறப்பட்டு சென்னைக்குச் சென்றுள்ளார். ரிசார்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு தினகரனை சந்திக்க செல்வதாக கூறினார்.
முதல்வர் அணியில் ஐக்கியம்
எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ், உண்மையிலேயே தினகரனைத்தான் சந்திக்க செல்கிறாரா? அல்லது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேருவதற்காக சென்னை செல்கிறாரா? என்று புரியவில்லை என்கிறார்கள் புதுச்சேரி வட்டாரத்தில்.
மனச் சோர்வில் எம்.எல்.ஏக்கள்
ஹோட்டலிலேயே முடங்கி கிடப்பதால் எம்.எல்.ஏக்கள் ஒரு வித மனச்சோர்வுடன் இருக்கிறார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை போல ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம் என்றும் வேதனையுடன் உறவினர்களிடம் கூறி இருக்கிறார்கள்.